விஷால் நடிக்கும் ‘சக்ரா’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய எம்.எஸ். ஆனந்தன் இயக்கியுள்ள படம் இது.
“இணையக் குற்றங்கள் (சைபர் கிரைம்) உச்சமாக இருக்கும் காலகட்டம் இது. நமக்கு எதிரே வந்து நிற்காமல் வேறெங்கோ இருந்தபடி ஒரு கூட்டம் செயல்படுகிறது.
“ஒரு வீட்டில் உள்ள பொருட்கள் திடீரென திருட்டு போகின்றன. அதுகுறித்து விசாரித்துவரும் போலிசார் திருட்டுக்கான பின்னணி குறித்து சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளும்போது அதிர்ச்சி அடைகிறார்கள். இதையடுத்து ராணுவ வீரர்களைக் கொண்ட விஷாலின் வீட்டிலும் சிலர் கை வைக்கிறார்கள்.
“அவரது தந்தை பெற்ற வீரதீரச் செயலுக்கான இந்திய அரசின் சக்ரா விருதுக்குரிய தங்கப்பதக்கமும் களவாடப்படுகிறது. இதையடுத்து அதைக் கண்டுபிடித்து மீட்க களம் இறங்குகிறார் விஷால். அதன் பின்னர் வரக்கூடிய நிமிடங்களை உங்களால் தவறவிடவே முடியாது,” என்கிறார் இயக்குநர் ஆனந்தன்.
நம்மை அறியாமல் நாம் களவாடப்படும் விதம், அதற்காகத் தீட்டப்படும் திட்டங்கள், அவற்றிலிருந்து தப்பிக்க செய்யவேண்டிய விஷயங்கள் என மொத்த படமும் பரபரப்பாக நகரும் என இப்போதே உத்தரவாதம் அளிக்கிறார் இவர்.
‘சக்ரா’வின் தயாரிப்பாளரும் விஷால்தான். ஒரு வரியில் கதையை விவரித்தபோதே அதன் வீச்சும் காட்சி அமைப்புகளும் எப்படி இருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டாராம்.
“என்னதான் ஒரு படத்துக்கான கதையும் கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக இருந்தாலும் அதை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது கதாநாயகன்தான். விஷாலைப் பொறுத்தவரை தனக்கான இந்தப் பணியை கச்சிதமாகச் செய்யக்
கூடியவர்.
“என்னைப் பொறுத்தவரை அவரது ஆகச்சிறந்த நடிப்பு ‘சக்ரா’வில்தான் வெளிப்பட்டிருக்கிறது. காட்சிக்கு காட்சி நிறைந்திருக்கும் பதற்றம், திகைப்பு, பரபரப்பு ஆகியவற்றுக்கு ஈடுகொடுத்து நடித்தார்.
“இணையக் குற்றங்களைப் பொறுத்தவரை அவற்றில் ஈடுபடுபவர்கள் மிகத் துல்லியமான திட்டங்களுடன் இயங்குவார்கள். தனி மனிதனாக இருந்தாலும் ஓர் அரசாங்கம் போல் செயல்படுகிறார்கள்.
“தாங்களும் ஒரு கதாநாயகன்தான் என்கிற மனோபாவம் அவர்களிடம் உள்ளது. அவர்கள் வழியில் சென்றுதான் நம்மீது சந்தேகம் ஏற்படாத வகையில் பிடிக்க வேண்டும்,” என்கிறார் ஆனந்தன்.
‘சக்ரா’வில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ப கச்சிதமாக நடித்துள்ளாராம்.
“ஷ்ரத்தாவைப் போன்ற நாயகிகள் இருந்தால் எந்தவொரு இயக்குநருக்கும் நிச்சயம் நிம்மதியும் மனநிறைவும் ஏற்படும். அவர் தமிழில் மேலும் பல படங்களில் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் ஆனந்தன்.