‘மாஸ்டர்’ படத்தின் மூலம் திரையரங்குகள் மீண்டும் களைகட்டத் துவங்கி இருப்பதால் ‘களத்தில் சந்திப்போம்’ பட வெளியீடு சற்று தாமதமாகி இருக்கிறது.
எனினும் ரசிகர்கள் மீண்டும் திரையரங்குகளை நாடிவருவது உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார் அப்படத்தின் நாயகன் ஜீவா.
“கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக ‘மாஸ்டர்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்தின் வசூல் சிறப்பாக இருந்ததால், திரையரங்குகள் புதுப்படங்களை வெளியிட அவசரம் காட்டவில்லை.
“போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் நாங்களும் படத்தை வெளியிடவில்லை. எனினும் ரசிகர்கள் அடுத்து வரும் படங்களுக்கும் ஆதரவு அளிப்பார்கள்,” என நம்புகிறேன் என்கிறார் ஜீவா.
‘நண்பன்’, ‘என்றென்றும் புன்னகை’ உள்ளிட்ட படங்களில் பிற நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர், ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் அருள்நிதியுடன் கைகோத்துள்ளார்.
எனினும் இந்தப் படத்தில் வித்தியாசமான அம்சம் என்று எதுவும் இல்லையாம்.
“உண்மையைச் சொல்லவேண்டுமானால், ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் வித்தியாசமாகச் செய்யவேண்டும் என நான் விரும்பவில்லை. கதைக்குப் பொருத்தமான விஷயங்களைக் கொடுத்தால் போதும் என்று நினைக்கிறேன். இலைச் சாப்பாட்டில் பாஸ்தா, நூடுல்ஸ் ஆகியவற்றைப் பரிமாற முடியுமா? இந்தப் படமும் அப்படித்தான்.
“நான் முன்பு நடித்த சில படங்கள் என் மனைவிக்குப் பிடிக்கவில்லை என்பதை ஊரடங்கின்போது அறிந்தேன். நாங்கள் இருவரும் விரும்பும் படங்களை எங்கள் மகன் ரசிப்பதில்லை. எனவே, ஒரு விஷயத்தை திரையில் பார்ப்பது என்பது அவரவரது தனிப்பட்ட விஷயம் என்றாகிவிட்டது.
“ஆனால், திரையரங்க கலாசாரம் என்பது மட்டும் ஒரு குடும்ப விவகாரமாகவே இன்றளவும் நீடிக்கிறது. அந்த உற்சாகமான அனுபவத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் மேம்படுத்த வேண்டும் என்பதே ‘களத்தில் சந்திப்போம்’ படக்குழுவின் நோக்கம்,” என்கிறார் ஜீவா.
நட்பு சம்பந்தப்பட்ட கதை என்பதால் அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்க முடியும் என்று உத்தரவாதம் அளிப்பவர், தமிழ்த் திரையுலகத்துக்கென தனிப்பட்ட கதை சொல்லும் பாணி இருக்கிறது என்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு வட இந்தியாவில் கிடைத்துவரும் வரவேற்பும் பாராட்டும் அசாதாரணமானதுஎன்று குறிப்பிடுபவர், ஏராளமான தென்னிந்திய மொழிப் படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியில் வெளியாவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
“கடந்த ஆண்டு வெளியான ‘ஜிப்ஸி’ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தேன். மேலும் அதன் ஒட்டுமொத்த கதைக்களமும் வித்தியாசமானது. அதன்பின்னர் மற்றொரு மாறுபட்ட களத்தைக் கொண்டு உருவானது ‘சீறு’.
“இப்போது ‘களத்தில் சந்திப்போம்’ வெளியாகிறது. மூன்று படங்களிலும் நான் ஒரே மாதிரி நடித்திருப்பதாக சிலர் கருதக்கூடும். எந்தவித பாகுபாடுமின்றி படங்களைப் பாருங்கள் என்பது மட்டுமே எனது வேண்டுகோள். தேவையின்றி அதிகம் யோசிக்க வேண்டாம்.
“ஒருசிலர் படத்தின் வசூல் குறித்தெல்லாம் கேள்வி எழுப்புவார்கள். அதுகுறித்துக் கவலைப்பட தயாரிப்பாளர் இருக்கும்போது இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? சினிமா என்பது ஒரு ‘மேஜிக்’. அது நமக்கு பலனளித்ததா என்பது மட்டும்தான் முக்கியம். மற்றவை குறித்து யோசிக்க வேண்டியதில்லை.”
திரையரங்குகள், ஓடிடி தளங்கள் தொடர்பாக நிலவும் சர்ச்சை குறித்து ஜீவா பேச விரும்பவில்லை. ஒரு நடிகராக கேமரா முன் நடிப்பதுதான் தமக்கு முக்கியமாகப் படுகிறது என்கிறார்.
“எந்தத் தளத்தில் நமது படம் வெளியாகிறது என்பது முக்கியமல்ல. எதுவாக இருப்பினும் கேமரா முன் நின்று நடிப்பது மாறப்போவது இல்லை. எந்தத் தளம் தேவை என்பது ரசிகர்கள் முடிவு செய்யவேண்டிய விஷயம். திரையரங்குகளில் ஒரு படம் திரையிடப்படும் காலம் இரண்டு வாரங்களாக சுருங்கி விட்டது.
“எனவே, அடுத்த கட்டமாக அவற்றை மின்னிலக்கத் தளங்களில்தான் பார்க்கமுடியும். தவிர ‘ஓடிடி’ தளங்கள் புதுமுகங்களுக்கும் குறைந்த செலவில் படமெடுப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை அளித்து வருகின்றன. இதனால் பல திறமைசாலிகளை அடையாளம் காணமுடிகிறது,” என்று சொல்லும் ஜீவா, அனைத்து வகையான படங்களிலும் நடித்து அனைத்து வகையான ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார்.