இந்திய சினிமா ரசிகர்கள் எந்த மொழியில் நல்ல படம் வெளியானாலும் அதை வரவேற்றுக் கொண்டாடி மகிழ்வார்கள் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு தரமான படைப்பாகவே ‘மாநாடு’ உருவாகியுள்ளது என்றும் அவர் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் வசூலும் தயாரிப்புத் தரப்புக்கு மன நிறைவு அளித்துள்ளதாம். இதையடுத்து அவர் நடித்து வரும் மற்ற படங்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ மிக விரைவில் வெளியீடு காண உள்ளது. இந்நிலையில் வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.
“எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். சிவபெருமானை ரொம்பப் பிடிக்கும். இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என்று இல்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். எனக்கு மத நம்பிக்கை பெரிதாக இல்லை.
“ஆனால் குறிப்பிட்ட ஒரு மதத்தின் மீது மட்டும் சிலருக்கு தவறான பார்வை இருக்கிறது. அதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது குறித்துப் பேசுவதற்கு ‘மாநாடு’ படத்தின் கதை சரியான களமாக இருந்தது. அதற்காகவே இப்படத்தை ஒப்புக் கொண்டேன்,” என்று சிம்பு கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு, சுசீந்திரன் என்று சிம்புவுடன் அண்மைக் காலங்களில் நெருக்கமாக உள்ள இயக்குநர்கள் பலரும் அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்காக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்தர் தலைமையிலான அணியினர் புதிதாகத் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றைத் தொடங்கி உள்ளனர்.
‘தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பெயரில் புதிய சங்கம் பதிவு செய்யப்பட்டு நிர் வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும் அண்மையில் தலைவர் பதவியில் இருந்து டி.ஆர் விலகிக் கொள்ளவே அவரது மனைவி உஷா ராஜேந்தர் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்தச் சங்கத்துக்கு நிதி திரட்டும் பொருட்டு சிம்பு ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு மருத்துவ உதவி, திருமண உதவித் தொகை, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை வசனகர்த்தா ஞானகிரி இயக்குகிறார்.