`சில்லுக் கருப்பட்டி' படத்தை அடுத்து 'ஏலே' படத்தை இயக்கியுள்ளார் ஹலிதா ஷமீம். இது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி உள்ள படைப்பாம்.
'ஏலே' தான் இவர் முதன்முதலாக எழுதிய கதையாம். `பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்', 'காதல்' உள்ளிட்ட படங்களைப் பார்த்ததால் ஏற்பட்ட தாக்கம் இந்தக் கதையை எழுதத் தூண்டியதாகச் சொல்கிறார்.
"இந்தக் கதையைத்தான் முதல் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது சாத்தியமாகவில்லை. `பூவரசம் பீப்பி' படத்துக்குப் பிறகு 'சில்லுக் கருப்பட்டி'யை இயக்கினேன்.
"இந்த நிலையில் இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி இருவரும் 'ஏலே' படத்தை தாங்களே தயாரிக்க முன்வந்தனர். நான் அவர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போதுதான் 'ஏலே' கதையை எழுதி இருந்தேன்.
"எனவே அது எப்படிப்பட்ட கதை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். மேலும் இந்தக் கதை அவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களே தயாரிக்கப்போவதாகச் சொன்னதும் எந்தத் தயக்கமும் இன்றி ஒப்புக்கொண்டேன்.
"எனக்கு கிடைத்த முதல் சுதந்திரமே நடிகர்கள் தேர்வுதான். தந்தை, மகன் ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களுக்கும் பெரிய நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எனது முதல் விருப்பமாக இருந்தது. ஆனால் அந்த முயற்சி இழுத்தடித்ததால்தான் இந்தக் கதையைப் படமாக்க நான் மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
"இந்த முறை அந்தத் தவற்றைச் செய்யவில்லை. 'எந்த கதாபாத்திரத்துக்கு யார் நடித்தால் பொருத்தமாக இருக்குமோ அவர்களையே நடிக்க வையுங்கள். முன்னணி நடிகர்கள் அவசியமில்லை' என்று தயாரிப்பாளர்கள் கூறியது பெரும் நிம்மதி அளித்தது.
"நான் உதவி இயக்குநராக முதலில் வேலை பார்த்தது சமுத்திரக்கனி சாரிடம்தான். அதனால் அவரை எளிதில் அணுக முடிந்தது. அவரை இப்படத்தில் வித்தியாசமாகக் காட்டவில்லை. இயல்பில் எப்படிப்பட்டவரோ அப்படியேதான் திரையிலும் தோன்றுவார்.
"தந்தை கதாபாத்திரத்துக்கு அவர் கச்சிதமாகப் பொருந்தி உள்ளார். அவரது மகனாக மணிகண்டன் நடித்துள்ளார். இருவரும் கிட்டத்தட்ட ஒரே சாயலில் இருப்பார்கள். அப்பா, மகன் என்றால் நிச்சயம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்.
"நாயகியாக மதுமதி நடித்துள்ளார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர்," என்று சொல்லும் ஹலிதா, அடுத்து சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிப்பதற்கு ஏற்ற ஒரு கதையை உருவாக்கி வருகிறாராம்.
`சில்லுக் கருப்பட்டி' படத்தை சூர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால்தான் அப்படத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து பிரபலமானது என்ற நன்றியுடன் குறிப்பிடுகிறார் ஹலிதா.
"சூர்யா சாரையும் ஜோதிகாவையும் முதன்முறையாக நேரில் சந்தித்த போதே, 'நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு ஏற்ற கதையை தயார் செய்யுங்கள்' என்று சூர்யா சொன்னார். அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் ஹலிதா.

