கைவசம் ஐந்து படங்களை வைத்திருக்கிறார் தான்யா ரவிச்சந்திரன். அவற்றுள் இரண்டு தமிழ்ப் படங்கள்.
இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லையே என்று கேட்டால் அடுத்தடுத்து வெளியாகும் என்று பதில் வருகிறது.
தற்போது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் 'இறக்கை முளைத்தேன்' படத்தில் நாயகியாக நடிக்கிறார் தான்யா. இதில் துருதுருப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்த புலன் விசாரணை அதிகாரி காதபாத்திரமாம்.
முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தெம்பாகப் பேசுபவர், இப்படியொரு வாய்ப்பைத் தந்ததற்காக இயக்குநர் பிரபாகரனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்கிறார்.
"பிரபாகரன் கதை சொன்னபோது உண்மையாகவே எனக்கு இறக்கை முளைத்துவிட்டது போல் உணர்ந்தேன். அப்படியொரு அருமையானபாத்திரத்தைத் தந்துள்ளார்.
"என்னை நம்பி இப்படியொரு முயற்சியை மேற்கொள்ள வேண்டுமா என்று அவரிடம் வெளிப்படையாகக் கேட்டுவிட்டேன். அதற்கு இந்தக் கதையை இயக்குவது மட்டுமல்லாமல் தாமே தயாரிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
"மேலும், 'கதை மீது நான் எந்தளவு மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பது இதன்மூலம் உங்களுக்குப் புரிந்திருக்கும். மேலும், கிராமத்துக் கதைகளைத்தான் என்னால் இயக்க முடியும் என்ற கருத்தையும் மாற்றி அமைக்க விரும்புகிறேன். அதனால்தான் முழுக்க ழுழுக்க நகரத்துப் பின்னணியில் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறேன்' என்று அவர் விளக்கமளித்தார்.
"எனவே இந்தப் படத்தில் நான் நடிக்க வேறு காரணம் சொல்ல வேண்டியதில்லை," என்கிறார் தான்யா.
புலன் விசாரணை அதிகாரி என்றாலும் இவருக்கு சண்டைக்காட்சிகள் என்று எதுவும் இல்லையாம். தனது குடும்பப்பாங்கான முகத்துக்கு சண்டைக் காட்சிகள் ஒத்துவராது என்கிறார் தான்யா. கதைப்படி இவரது கதாபாத்திரத்தின் பெயர் ஆராதனா. இவரது புத்திசாலித்தனத்துக்காக அனைவரும் இவரை ஆராதனை செய்வதுதான் கதை.
"இந்தக் கதாபாத்திரத்துக்காக எனது உடல்மொழியைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறேன். மற்றபடி இயக்குநர் சொல்வதைக் கேட்டு நடித்து வருகிறேன். எனது கதாபாத்திரத்துக்கு இதுவே போதுமானதாக உள்ளது," என்று சொல்லும் தான்யா தற்போது தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இதன் காரணமாக தெலுங்கில் பேசக் கற்று வருகிறாராம்.
"மொழி தெரியாமல் நடிக்க முடியுமா என்ற தயக்கமும் பயமும் இருந்தது. எப்படியோ சமாளித்து வருகிறேன். எந்த மொழியில் நடித்தாலும் உண்மையான ஈடுபாட்டுடன் நடிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்றால் முதலில் வசனங்களின் அர்த்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நடிப்பு ஈர்ப்புடன் இருக்கும் என்று 'கருப்பன்' படத்தில் நடித்தபோது விஜய் சேதுபதி சொல்லிக் கொடுத்தார். அதை இப்போது வரை நான் மறக்கவில்லை," என்கிறர் தான்யா.
தெலுங்கில் தனது முதல் படத்தில் பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறாராம். இவர் முறையாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர். தொழில்முறைக் கலைஞராக நிறைய நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்.
"பரதநாட்டியம் என்றதுமே எனது ஆர்வம் அதிகமாகிவிட்டது. நடிப்புடன் நடனத் திறமையையும் வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைப்பது உற்சாகம் அளித்தது.
"என்னைப் பொறுத்தவரை நாயகியை மையப்படுத்தும் படங்களில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. வணிக அம்சங்கள் நிறைந்த படங்களிலும் கதாபாத்திரங்களிலும்கூட நடிக்கத் தயார். இதுவரை நான் நடித்த எல்லா பாத்திரங்களுமே படம் முழுவதும் வரக்கூடியதாகவே அமைந்தன. இது தானாக அமைந்தது. எனது அதிர்ஷ்டம் என்று சொல்வதைவிட திரையுலகில் எல்லாம் மாறிக்கொண்டு வருவதன் விளைவுதான் என்பேன்," என்று சொல்லும் தான்யா தமிழில் மிஷ்கின் இயக்கத்தில்தான் அறிமுகமாக இருந்தார்.
சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவியது. இதுகுறித்துக் கேட்டால் கடந்து போனதைப் பற்றிப் பேசுவது சரியாக இருக்காது என்றும் மிஷ்கின் அழைத்தால் அவரது இயக்கத்தில் நடிப்பது உறுதி என்றும் சொல்கிறார்.
"எனது தாத்தாவும் நடிகருமான ரவிச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் என்னை வாழ்த்தி உற்சாகப்படுத்தி இருப்பார்," என்கிறார் தான்யா.