‘சுல்தான்’ படம் வெளியீடு காணத் தயாராகிவிட்டது. முழுக்க முழுக்க வணிக ரீதியாலான அம்சங்களுடன் படம் சிறப்பாக உருவாகி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன்.
அதென்ன ‘சுல்தான்’?
“எதுகுறித்தும் கவலைப்படாமல் தன் மனதுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதைச் செய்து வாழ்பவன்தான் இந்த ‘சுல்தான்’. இவன் எப்படிப்பட்டவன் என்று அவ்வளவு எளிதில் உங்களால் வரையறுக்க முடியாது. சமுதாயத்துக்கு நிச்சயம் உணர்த்தியே ஆகவேண்டும் எனும் நல்ல செய்தியுடன் வருகிறான் சுல்தான்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
சிவகார்த்திகேயனை ‘ரெமோ’ படத்தில் பளிச்சென்று தெரியவைத்தவர் இவர். இப்போது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அதிரடிக் கதையுடன் கார்த்தியுடன் கைகோத்து களம் இறங்குகிறார்.
“இந்தப் படம் வெற்றி பெறுவதற்கான அத்தனை வேலைகளையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறோம். சில சமயங்களில் சில விஷயங்கள் நாம் ஆசைப்பட்ட மாதிரியே பளிச்சென்று நம் கண்முன் வந்து நிற்கும். இது அப்படிப்பட்ட ஒரு படம்தான்.
“பாண்டவர் பக்கம் நிற்காமல் கிருஷ்ணர் கௌரவர் பக்கம் நின்றிருந்தால் என்று படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் ஒரு வசனம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கேள்விக்கான விடைதான் சுல்தான்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
கதைப்படி சுல்தான் என்பது கார்த்தியின் செல்லப் பெயராம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு ரவுடிக் கூட்டம் இருக்குமாம். கதை எழுதும்போது இதையெல்லாம் எளிதில் எழுதிவிட்டாலும் அதைக் காட்சிப்படுத்தும்போது வெகுவாக மெனக்கெட வேண்டி இருந்தது என்கிறார்.
“கார்த்தியைப் பொறுத்தவரை விமர்சனங்களை வெளிப்படையாக வரவேற்கிறார். பிறர் தன்னைக் குறை சொல்லும் முன்பே தன்னைச் சரிசெய்துகொள்ளும் இயல்பும் பக்குவமும் அவரிடம் உள்ளது.
“‘கைதி’ படம் வெளிவந்த பிறகு அவருக்கே தன் படங்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். அந்த எதிர்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி இருப்பதில் எனக்கு அதிக மனநிறைவும் நிம்மதியும் ஏற்பட்டுள்ளது. அவரும் இதை உணர்ந்திருப்பதாக நினைக்கிறேன். என்னை தன் தம்பி மாதிரி நினைத்துக் கொண்டாடுகிறார்,” என்று நெகிழ்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
இப்படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா. விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி இவர்தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ‘சுல்தான்’ படம் அவரைத் தமிழ் ரசிகர்களின் மனதில் கச்சிதமாக இடம்பெற வைக்கும் என்கிறது அப்படக்குழு.
“பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்ணின் சாயலில் இருக்கிறார் ராஷ்மிகா. எந்த நேரமும் உற்சாகமும் கேலியும் கிண்டலுமாக படப்பிடிப்பு அரங்கில் வலம்வருவார். அதேசமயம் ‘ஆக்ஷன்’ என்று சொல்லிவிட்டால் போதும் ஒரே நொடியில் கதாபாத்திரமாக மாறிவிடும் திறமைசாலி.
“எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருப்பது எளிதல்ல. அனைவரிடமும் மிக இயல்பாகப் பேசிப் பழகும் சின்னப் பெண். இப்படத்தில் கார்த்திக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையேயான வண்ணமயமான காதல் இளம் ரசிகர்களைப் பாடாய்ப்படுத்தும். இப்போது தெலுங்கு தேசத்தின் செல்லப் பெண்ணாக வலம் வரும் ராஷ்மிகா ‘சுல்தான்’ வெளியான பிறகு தமிழ் ரசிகர்களுக்கும் செல்லப் பெண்ணாகி விடுவார்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.
இப்படத்தில் யோகிபாபுவும் இணைந்திருப்பது பெரும் பலம் என்கிறது படக்குழு. அவரும் கார்த்தியும் சேர்ந்து செய்யும் கலாட்டாவால் திரையரங்குகளில் சிரிப்பு தெறிக்கும் என்கிறார்கள்.
“படப்பிடிப்பு தொடங்கிய ஒன்றிரண்டு நாட்களிலேயே கார்த்திக்கும் யோகிபாபுவும் மனதளவில் நெருங்கி வந்துவிட்டனர். இருவரும் பேசும் ஒற்றைவரி வசனங்களால் மொத்த படப்பிடிப்பு அரங்கும் சிரிப்பலையில் அதிர்ந்தது.
“ரசிகர்கள் எவ்வளவு மகிழ்வார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் வில்லன் ராமச்சந்திர ராஜுவை கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்திருக்கிறோம். மனிதர் நடிப்பில் மிரள வைக்கிறார்.
“படப்பிடிப்பின்போது அவர் ஓர் ஓரமாக நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாலும் கூட பயமாக இருக்கும். அவருடைய அட்டகாசங்களைத் திரையில் பார்க்கும்போது ரசிகர்களும் மிரள்வார்கள்,” என்கிறார் பாக்யராஜ் கண்ணன்.