மாமனார் ரஜினி வசிக்கும் போயஸ் தோட்டம் பகுதியிலேயே மருமகன் தனுஷும் புது வீடு கட்டி குடியேற உள்ளார்.
இந்தப் புது வீட்டுக்கான பூமி பூசை அண்மையில் நடந்துள்ளது. இதில் ரஜினியும் பங்கேற்றார்.
தனுஷின் வளர்ச்சியும் போயஸ் தோட்டத்தில் அவர் குடியேறுவதும் கோடம்பாக்கத்தினரை வெகுவாக ஆச்சரியப்பட வைத்துள்ளது.
சென்னையில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முதன்மையானது போயஸ் தோட்டம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் வீடுகள் அங்குதான் அமைந்துள்ளன. முக்கியப் புள்ளிகளும் தொழிலதிபர்களும் வசிக்கும் பகுதி என்பதால் 24 மணி நேரமும் காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள பகுதி இது.
ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை குறைந்தபட்சம் 25 கோடி ரூபாய் என்பதுதான் சந்தை நிலவரம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் 25 கோடிக்கும் மேல் கொட்டிக் கொடுக்க முன்வந்தாலும்கூட அங்கு இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
போயஸ் தோட்டத்தில் நிலமோ, அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டையோ வாங்கவேண்டும் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டி இருக்கும். அப்பகுதியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் வீட்டையோ, நிலத்தையோ விற்க முன்வந்தால்தான் புதியவர்கள் அதை வாங்கி குடியேற முடியும். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே போயஸ் தோட்டத்தில் குடியேறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வந்திருக்கிறார் தனுஷ்.
தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒன்பதாவது தளத்தில் வசிக்கிறார் தனுஷ். படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தன் பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்காவைச் சந்தித்து அவர்களுடன் பொழுதைக் கழிக்க அங்கு செல்வது ரஜினியின் வழக்கம்.
அந்தச் சமயங்களில் ரஜினியைப் பார்த்ததும் கூட்டம் கூடிவிடுமாம். இது அவருக்கும் தனுசுக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் மூன்று கிரவுண்ட் இடம் விற்பனைக்கு வருவதாக ரஜினிக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதை மருமகனிடம் தெரிவித்துள்ளார் ரஜினி.
பிறகென்ன, உடனுக்குடன் உரிய தொகையும் ஆவணங்களும் கைமாற, எதிர்வரும் தீபாவளிக்குள் புது வீட்டைக் கட்டும் வேகத்தோடு பூமிபூசையை நடத்தி முடித்துள்ளார் தனுஷ்.