தமிழ் ரசிகர்கள் இந்தளவுக்கு என்மீது பாசம் காட்டுவார்கள், என்னை நேசிப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் இளம் நாயகி நிதி அகர்வால்.
இனி தமிழ்ப் படங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் எனும் எண்ணத்தை ரசிகர்கள் தன் மனதில் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
நிதி அகர்வால் இந்தளவு நெகிழ காரணம் இருக்கிறது. தமிழில் ‘பூமி’, ‘ஈஸ்வரன்’ ஆகிய இரு படங்களில் மட்டுமே நடித்துள்ள இவருக்கு தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். அன்பர் தினத்தையொட்டி நிதி அகர்வாலின் சிலைக்கு பாலபிஷேகம் செய்து கற்பூரம் ஏற்றி வழிபட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும் காணொளிப் பதிவுகளும் சமூக வலைத் தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து பலரும் அவரையும் அவரது குடும்பத் தாரையும் தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரிக்கின்றனராம்.
“உண்மையைச் சொல்லவேண்டுமானால், ரசிகர்களின் இந்தச் செயல் எனக்கு ஒரு வகையில் அதிர்ச்சி அளித்துள்ளது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்பதையும் மறுப்பதற்கில்லை.
“என்மீது அன்பைப் பொழியும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குக் கோவில் கட்டியிருக்கிறார்கள் என்பதையே நம்பமுடியவில்லை எனும்போது அதைக் கட்டியவர்கள் யார் என்ற கேள்விக்கும் என்னிடம் விடையில்லை. அந்தக் கோவில் எங்கிருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. எனினும் சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருப்பதாக இப்போது தகவல் வந்திருக்கிறது.
“தமிழ், தெலுங்கு ரசிகர்கள் இணைந்துதான் இந்தக் கோவிலைக் கட்டியிருப்பதாகவும் சொல்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்களுடன் பேசினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்,” என்கிறார் நிதி அகர்வால்.
தமிழ் சினிமா நடிகர், நடிகைகளுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் கோவில் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு எம்ஜிஆர்., குஷ்பு, நமீதா, ஹன்சிகா உள்ளிட்ட சிலருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கும் அவரது ரசிகர்கள் கோவில் கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டப்பட்டிருப்பதுதான் அவரை மட்டுமல்ல கோடம்பாக்கத்தினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
“தமிழில் இரண்டு, தெலுங்கில் அதை விடக் கூடுதலாக ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். அதற்குள் கோவில் கட்டுகிறார்கள் என்றால் கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ரசிகர்களின் இச்செயலை முன்கூட்டியே யூகிக்க முடியவில்லை. காரணம் எனக்கென பதிவு செய்யப்பட்ட முறையான ரசிகர் மன்றங்கள் கூட இல்லை. ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலமாக உரையாடியுள்ளேன் அவ்வளவுதான்.
“கடந்தாண்டு கொரோனா உள்ளிட்ட விவகாரங்களால் அதுவும்கூட அடிக்கடி நிகழவில்லை. இந்தாண்டும் அதிகமான படங்கள் நடிக்கவேண்டி இருப்பதால் வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். பெரும்பாலான நாட்கள் படப்பிடிப்பில் கழிந்துவிடும். எனவே ரசிகர்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவது என்பது தெரியவில்லை.
“ஒருசில பேட்டிகளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறேன். அதேபோல் நாய்களை செல்லப்பிராணியாக வளர்ப்பது குறித்தும் கூறியுள்ளேன். இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் பலர் தொடர்ந்து அன்னதானம் செய்து வருகிறார்கள் என்பதை அறிவேன். அதேபோல் விலங்குகளின் நலத்தைப் பேணும் வகையிலான நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
“இதையெல்லாம் அறிந்து மகிழ்ச்சியில் இருந்த எனக்கு அன்பர் தினத்தையொட்டி ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாத, நான் எதிர்பாராத ஒரு பரிசைத் தந்திருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்,” என்று ஒரேயடியாக நெகிழும் நிதி அகர்வால், தெலுங்கில் பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து தமிழில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தில் இணைகிறார்.