கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிறது 'அழகிய கண்ணே'. சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். விஜயகுமார் இயக்க, நாயகனாக பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் அறிமுகமாகிறார்.
"இன்றைய தேதியில் கூட்டுக்குடும்பம் என்றால் என்ன என்பதே எல்லோருக்கும் மறந்துவிட்டது. அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை. இன்றைய நகரத்துச் சூழலில் காணாமல் போய்விட்ட அந்த அனுபவம் குறித்து இந்தப் படத்தில் எடுத்துச் சொல்கிறோம்.
"நாயகியாக தேர்வு செய்வதற்கு முன்பு சில காட்சிகளில் சஞ்சிதாவை நடிக்க வைத்தோம். மிக இயல்பாக, எதிர்பார்த்ததைவிட அழகாக நடித்தார். அதனால் தயக்கமின்றி ஒப்பந்தம் செய்தோம்," என்கிறார் விஜயகுமார்.
தனது கதாபாத்திரம் மனதைக் கவரும் வகையில் இருக்கும் என்றும் மிகவும் ரசித்து நடித்ததாகவும் சொல்கிறார் சஞ்சிதா.
"கதைப்படி மதுரையைச் சேர்ந்த நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற சென்னைக்கு வருகிறேன். காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை என எனது வாழ்க்கை மூன்று கட்டங்களாக விவரிக்கப்படும். இப்படமும் பாத்திரமும் என்னை அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். இது மதுரையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படம். மதுரையில் தொடங்கும் கதை சென்னையில் முடிவடையும். ஒவ்வொரு காட்சியும் இயல்பாகவும் மனதைக் கவரும் வகையிலும் இருக்கும்," என்கிறார் சஞ்சிதா.