கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கோடம்பாக்கத்தில் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன.
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பில் முதலில் பங்கேற்ற சில நடிகைகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர்.
கிட்டத்தட்ட தினமும் ஏதேனும் ஒரு படத்துக்கான படப்பிடிப்பில் பங்கேற்கிறாராம். ஓய்வில்லை என்றாலும் திரைப்பணிகள் வேகமெடுத்திருப்பதில் மகிழ்ச்சி என்கிறார்.
"ஓய்வின்றிப் பணியாற்றுவது ஒருவகையில் மனநிறைவும் உற்சாகமும் அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை இதை ஒரு வரமாகக் கருதுகிறேன்.
"நான் இடைவிடாமல் பணியாற்றுவதற்கு படக்குழுவினரும் முக்கிய காரணம். அவர்கள் தரும் ஊக்கமும் ஒத்துழைப்பும்தான் நிறைய சாதிக்கவேண்டும் என்று என்னைத் தூண்டுகிறது. நான் திரைப்படம் சார்ந்த குடும்பத்திலிருந்து நடிக்க வரவில்லை. எனது கடின உழைப்பும் எனது சக கலைஞர்களும்தான் என் வெற்றிக்கான காரணங்கள்," என்கிறார் பிரியா.
தமிழ் சினிமாவில் இப்போது அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நாயகிகளின் பட்டியலில் எந்தவிதத் தயக்கமும் இன்றி பிரியாவுக்கு முதலிடம் கொடுக்கலாம். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் தோன்றக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருக்கிறாராம்.
"என்னைப் பொறுத்தவரை என்னை வைத்துப் படமெடுக்கும் இயக்குநர்களும் இவ்விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். தொலைக்காட்சியில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறேன். அதனால் தொலைக்காட்சி நடிகை என்ற பிம்பத்துடனேயே சிலர் என்னைப் பார்க்கிறார்கள்.
"தொலைக்காட்சி தொடர் என்னைத் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சென்றது உண்மைதான். அதற்காக சின்னத்திரையில் தோன்றியது போலவே திரைப்படங்களிலும் நடிப்பேன் என்று கருதக்கூடாது. என்னால் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் மிளிர முடியும். அதற்கேற்பவே எனக்கான கதைகளையும் படங்களையும் தேர்வு செய்கிறேன்," என்கிறார் பிரியா.
ஊரடங்கின்போது கிடைத்த ஓய்வில் நிறைய எழுதிக்கொண்டிருப்பதாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அது நீடிக்கிறதா என்று கேட்டு ரசிகர்கள் பலர் நச்சரிக்கிறார்களாம்.
"நான் எழுதத் தொடங்கியது உண்மைதான். ஆனால், அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று எதுவும் ஏற்படவில்லை. நிறைய வாசிக்கிறேன். ஆனால், தொடர்ந்து எழுதவேண்டும் என்பதற்கான பிடிமானத்தை இழந்துவிட்டேன். எனது எழுத்தில் முதிர்ச்சி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எனவே, இவ்விஷயத்தில் நான் போகவேண்டிய தூரம் மிக நீண்டது என்பதை உணர்ந்திருக்கிறேன்," என்கிறார் பிரியா.
தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிகை என்று கோடம்பாக்கத்தினர் இவரைக் குறிப்பிடுகிறார்கள். இதற்காக சிலர் பாராட்டுகிறார்கள் என்றால், ஒருசிலர் இப்படிப் பேசவேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்களாம்.
"வளர்ந்துவரும் ஒரு நடிகை இயல்பாகப் பேசுவதையும் சில விஷயங்கள் குறித்துக் கருத்து தெரிவிப்பதையும் ஒருதரப்பினர் ஏற்றுக் கொள்வதில்லை. பெரிய நட்சத்திரங்கள் மட்டுமே கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பெற்றிருப்பதுபோல் நினைக்கிறார்கள்.
"என்னால் இதை ஏற்க முடியவில்லை. கருத்து சொல்லும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதற்கு நீங்கள் பெரிய நட்சத்திரமாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை," என்கிறார் பிரியா.