அண்மையில் மாலதீவுக்கு சென்று வந்த பிறகு புத்துணர்ச்சியுடன் செயல்பட முடிவதாகச் சொல்கிறார் ரைசா வில்சன்.
அடுத்து வெளியாக உள்ள 'த சேஸ்' தமக்கு வெற்றிப்படமாக அமையும் என உறுதியாக நம்புகிறாராம்.
"கொரோனா, ஊரடங்கு என பல காரணங்களால் ஓராண்டாக எங்கேயும் போக முடியவில்லை. எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மாலதீவுக்கு சென்று வர மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டன. அதனால் அங்கே சென்றேன்.
"அங்கு பெரும்பாலான பொழுதை கடற்கரையில்தான் செலவிட்டேன். ஓராண்டாக வீட்டுக்குள் முடங்கிக் கிடந்ததற்கு இந்த மாற்றமும் பயணமும் தேவைப்பட்டது," என்கிறார் ரைசா.
அண்மையில் காதலர் தினத்தையொட்டி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது காதல் அனுபவங்கள் உண்டா என்பதே பலரது கேள்வியாக இருந்ததாம்.
தாம் யாரையும் காதலிக்கவில்லை என்பதை நூறு விழுக்காடு நம்பலாம் என்கிறார்.
"எப்போதாவது நான் சந்திக்கும் மனிதர்களில் யாரேனும் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படும்.
"எனினும் மறுதினமே அது காணாமல் போய்விடும். இதைத் தவிர பெரிதாக ஏதும் இல்லை," என்று சொல்லும் ரைசாவுக்கு, அண்மைய வெளியீடுகளில் 'கோலமாவு கோகிலா'வை தான் அதிகம் பிடித்திருக்கிறது.
அப்படத்தை நெல்சன் மிக நேர்த்தியாக இயக்கி உள்ளதாகப் பாராட்டுகிறார். அதுபோன்ற ஒரு கதைக்களத்தில், நெல்சன் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறாராம்.
'த சேஸ்' படம் குறித்து?
"மிக வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் தொலைபேசி மூலம் கதையைச் சொன்னபோதே, 'இதில் நடிப்பது சவாலாக இருக்கும்' என்று தோன்றியது. என் கணிப்பும் சரியாக இருந்தது.
"பொதுவாக எனக்கு திகில் கதைகள் பிடிக்கும். இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளும் உள்ளன. அவற்றில் நான் சிறப்பாக நடித்திருப்பதாக ரசிகர்கள் நினைத்தால் அதற்கான பாராட்டு சண்டைப் பயிற்சியாளர் திலிப் சுப்பராயன் சாருக்குத்தான் போக வேண்டும்.
"நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடிப்பது சரிதானா என்று சிலர் கேட்கிறார்கள். கதையையும் படக்குழுவையும் நம்பித்தான் நடிக்கிறேன். எனது தேர்வும் சரியாக அமையும் என நம்புகிறேன்," என்கிறார் ரைசா.
இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அது மகிழ்ச்சி அளிப்பதாகவும் படத்துக்கு பலம் சேர்க்கும் என்றும் ரைசா சொல்கிறார்.