சினிமாவுக்கு அடுத்தபடியாக யோகாசனம் குறித்துதான் அதிகம் பேசுகிறார் சமந்தா. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தினமும் யோகா செய்யத் தவறமாட்டேன் என்கிறார்.
இன்ஸ்டகிராமில் மட்டும் சுமார் 15 மில்லியன் பேர் சமந்தாவைப் பின்தொடர்கிறார்கள். இத்தளத்தில் அவ்வப்போது அவர் வெளியிடும் படங்கள் அழகாக இருப்பதாக லட்சக்கணக்கானோர் பின்னூட்டமிடுகிறார்கள்.
“வெறும் புகைப்படங்களை மட்டும் வெளியிடுவது என் நோக்கமல்ல. அவற்றினூடே சில நல்ல விஷயங்களையும் தெரிவிக்கிறேன். நான் உடற்பயிற்சி, யோகா செய்யும் காட்சிகள் அடங்கிய காணொளிப் பதிவுகளையும் வெளியிடுகிறேன்.
“இது உடல்நலம் குறித்து ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்,” என்று சொல்லும் சமந்தா, இந்தப் புத்தாண்டில் தினமும் யோகாசனத்துடன் மூச்சுப்பயிற்சியிலும் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம்.
இரண்டையும் ஒருசேர செய்தால் நீண்ட காலம் ஆரோக்கியத்தைப் பேண முடியும் என்பது சமந்தாவின் அறிவுரை.
“மூச்சைக் கட்டுப்படுத்த தெரிந்த ஒருவருக்கு வாழ்க்கையும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும். வழக்கமான உடற்பயிற்சியுடன் மூச்சுப்பயிற்சியும் சேரும்போது உடலில் அதிசயக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும் ,” என்று விளக்கம் அளிக்கிறார்.
சமந்தாவின் கட்டுடலுக்கான ரகசியம் என்ன?
“ரகசியம் என்று எதுவும் இல்லை. எனக்கு உணவுக் கட்டுப்பாடு என்பது பிடிக்காது. நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் விரும்பியதைச் சாப்பிடுவேன். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே பிரபலமாக உள்ள உணவு வகையைச் சாப்பிடத் தவறுவதில்லை. இதையும் மீறி உடல் பெருக்காமல் எடை கூடாமல் இருக்க உடற்பயிற்சிதான் காரணம்,” என்று சொல்லும் சமந்தா, ஒரு புத்தகப் பிரியர்.
மாதந்தோறும் ஒருசில புத்தகங்களையேனும் படித்துவிடுகிறார். சிறு வயதில் இருந்தே வாசிப்புப் பழக்கம் உண்டாம்.
“சிறு வயதில் நிறைய ‘காமிக்ஸ்’ புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். சாந்தாராம், மகாபாரதம், ஆஸ்ட்ரிக்ஸ் அண்ட் ஆப்ளிக்ஸ் போன்ற புத்தகங்களால்தான் எனது புத்தக உலகம் விரிவடைந்தது. வாசிப்புப் பழக்கம் நம்மை எப்போதும் விவரமறிந்தவர்களாக வைத்திருக்கும். குழந்தைகள் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்.”
கடந்த காலத்தைக் குறித்து அதிகம் யோசிக்கக் கூடாது என்பது சமந்தாவின் கொள்கைகளுள் ஒன்று. நடந்தவற்றை நினைத்துக் கவலைப்படுவதால் நிலைமை மாறிவிடப் போவதில்லை என்கிறார்.
“வாழ்க்கையை அழகாக்க வேண்டும் என்றால் நிகழ் தருணத்தைக் கொண்டாட வேண்டும். இப்போது இந்த நிமிடம், இந்த நொடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நிகழ்காலம் நன்றாக இருந்தாலே போதும், எதிர்காலம் இனிப்பாகும்,” என்று தத்துவார்த்தமாகப் பேசும் சமந்தாவுக்கு, பிரச்சினைகளில் இருந்து விடுபட இயற்கைதான் கைகொடுக்கிறது. இயற்கைக் காட்சிகளை ரசிப்பது மனதை லேசாக்கும் என்கிறார்.
மேலும் செல்லப் பிராணிகளுடன் கொஞ்சிக் குலாவுவது, யுடியூப்பில் செல்லப்பிராணிகள் செய்யும் சேட்டைகள் தொடர்பான காணொளிகளைப் பார்ப்பது மனதில் மீண்டும் நிம்மதியையும் இனம்புரியாத உற்சாகத்தையும் கொண்டு வரும்,” என்கிறார்.
திடீரென ஒருநாள் காலை தூங்கி எழும்போது நீங்கள் ஒருநாள் முதல்வர் என்று அறிவிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்விக்கு சமந்தா அளித்துள்ள பதில் சுவாரசியமானது.
“தொடர் படப்பிடிப்பு காரணமாக என் கணவரைச் சந்திப்பது, இருவருமாகச் சேர்ந்து வெளியே செல்வது என்பது அபூர்வமாக உள்ளது. எனவே, முதல்வரானால் ஒன்றும் செய்ய மாட்டேன். மீண்டும் தூங்கி சமந்தாவாக கண்விழிப்பேன். காரணம், மற்ற அனைத்தையும்விட நானாக இருப்பதையே நேசிக்கிறேன்,” என்கிறார் சமந்தா.