காதல் அனுபவங்கள் குறித்து இளம் நடிகைகள் தங்கள் அனுபவங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அப்பதிவுகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
'துய்மையான காதல்' என்ற தலைப்பில் கீர்த்தி சுரேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதனுடன் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் இசையமைப்பாளர் அனிருத்துடன் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், கீர்த்தி சுரேஷ் தரப்பு இதை மறுத்திருந்தது.
இருவரும் தங்கள் தொழிலில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் நண்பர்களாக மட்டுமே பழகுவதாகவும் கீர்த்தியின் தந்தை தெரிவித்திருந்தார்.
தற்போது படப்பிடிப்புக்காக துபாய் சென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். அதனால் குடும்பத்தாரின் அருகாமை இல்லாமல் தவிப்பதாக கூறி வருகிறார்.
இந்நிலையில்தான் தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்திக்கு அவரது தாயார் மேனகா மருதாணி வைத்து விடும் காட்சி பதிவாகி உள்ளது. இப்பதிவுக்கு 'தூய்மையான வடிவத்தில் காதல்' என்று கீர்த்தி தலைப்பிட்டுள்ளார். இது ஊரடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம். கீர்த்தியின் ரசிகர்கள் இதைப் பரவலாகப் பகிர்ந்து வருவதுடன் இந்தத் தூய்மையான காதலுக்கு ஈடு இணை இல்லை என்றும் பின்னூட்டமிட்டுள்ளனர்.
இதேபோல் நடிகை ராஷி கன்னா, சிறு வயதில் தனக்கு வந்த காதல் கடிதங்கள் குறித்து பதிவிட்டுள்ளார். பள்ளியில் படித்தபோது மூத்த மாணவன் ஒருவன் இவரைக் காதலித்தானாம். பலமுறை ராஷிக்கு காதல் கடிதம் கொடுக்கவும் முயன்றானாம்.
"அப்போதெல்லாம் அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து விடுவேன். ஆனாலும் ஒருநாள் சிக்கிக் கொண்டேன். அவன் தைரியமாக என்னைப் பின்தொடர்ந்து வந்து என் கையில் ஒரு கடிதத்தை திணித்துவிட்டான். கூடவே ஒரு ரோஜா பூவையும் கொடுத்துச் சென்றான்.
"தொடக்கத்தில் எனக்கு அந்த மாணவனை அறவே பிடிக்காது. ஆனால், தன் காதல் கடிதத்தில் என்னப் பற்றி வர்ணித்து பெருமையாக குறிப்பிட்டு இருந்ததைப் படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் கடிதத்தை பத்திரமாக எடுத்துச் சென்று என் அம்மாவிடம் கொடுத்தேன். அவரும் அதைப் படித்துப் பார்த்தார்.
"'உன்னைப் பற்றி வேறு யாராலும் இந்தளவு வர்ணிக்க முடியாது போல் இருக்கிறது. நீ இத்தனை அழகாக இருப்பதை நாங்களே கூட கவனிக்கவில்லை. அவனைப் பிடித்திருக்கிறதா... உண்மையைச் சொல்' என்றார் அம்மா. எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றேன்.
"அதன்பிறகு அந்த மாணவனைப் பற்றி நான் யோசித்ததே இல்லை. அவனைச் சந்திக்கவும் இல்லை. அவன் என்னவானான் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது," என்று ராஷி கன்னா தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.