ஆர்யா நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படம் 'சார்பெட்டா பரம்பரை'. 'டெடி' படத்தில் நடித்து முடித்த உற்சாகத்துடன் புதுப்படத்துக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
மனைவியுடன் இணைந்து நடித்த படம் என்பதால் 'டெடி'யின் வெற்றியை ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளாராம். விளையாட்டுத்தனமாக இருந்த தனது வாழ்க்கை இப்போது அடியோடு மாறிவிட்டதாகச் சொல்கிறார்.
"உண்மையில் விளையாட்டுப் போக்கில்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தேன். சினிமாவைக்கூட பெரிதாக நினைத்ததாகச் சொல்லமுடியாது. பிறகுதான் திரைத்துறையின் அருமை மெல்ல புரியத் தொடங்கியது.
"லட்சம் பேர் சினிமாவுக்குள் வரவேண்டும் எனும் லட்சியத்துடன் அலைந்து திரிகிறார்கள். ஆனால், இங்கே கொஞ்சம் பேர்தான் உட்கார முடியும். அவ்வளவுதான் இடமிருக்கிறது.
"விளையாட்டாக இருந்தவர்கள் சாய்ந்து, சரிந்து அமர்ந்தவர்கள் எல்லாம் பிறகு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இடத்தின் அருமை புரிந்ததால் இப்போது எச்சரிக்கையாக இருக்கிறேன். மிகுந்த கவனத்துடன் படங்களைத் தேர்வு செய்கிறேன்," என்கிறார் ஆர்யா.
விளையாட்டுத்துறை என்றால் இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம். கால்பந்து, சைக்கிள் ஓட்டுவது என்று ஏதாவது ஒரு விளையாட்டில் எப்போதுமே ஈடுபட்டிருப்பாராம். இடையில் குத்துச்சண்டை மீது ஆர்வம் ஏற்படவே அதில் ஈடுபாடு காட்டியுள்ளார்.
"இந்தச் சமயத்தில்தான் இயக்குநர் பா. ரஞ்சித் குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட ஒரு கதையை இயக்க திட்டமிடுவதாகக் கேள்விப்பட்டேன். என் நண்பனும் நடிகனுமான கலையரசனை நச்சரித்து ரஞ்சித்திடம் என்னை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன். அடுத்த சில தினங்களில் ரஞ்சித்தே என்னிடம் 'சார்பெட்டா' கதையைச் சொல்லி என்னை ஒப்பந்தம் செய்தார்," என்கிறார் ஆர்யா.
தன் கதையின் மீது ரஞ்சித் உயிரையே வைத்திருப்பதாகவும் அந்த உணர்வு தம்மையும் தூண்டிவிட்டது என்றும் குறிப்பிடுபவர், ரஞ்சித் தம்மை அசல் குத்துச்சண்டை வீரனாகவே மாற்றிவிட்டதாகச் சொல்கிறார்.
"ரஞ்சித்துக்கு சினிமா மீதுள்ள ஆர்வம் குறித்து சொல்லி மாளாது. இந்தப் படத்துக்காக மற்றவர்களை விட மிக அதிகமாக உழைத்திருக்கிறார். எனக்கான கதாபாத்திரத்தையும் அதற்கேற்ப என்னையும் மிக அழகாகச் செதுக்கி உள்ளார்.
"அதனால்தான் ஒரு குத்துச்சண்டை வீரருக்குரிய அனைத்து அம்சங்களையும் என்னிடம் உங்களால் பார்க்க முடியும். நான் திரையில் அசல் குத்துச்சண்டை வீரனாக தெரிகிறேன் என்றால் அதற்கு ரஞ்சித்தான் காரணம்.
"சினிமா துறை இப்போது பல மாற்றங்களைக் கண்டுள்ளது. எல்லா மாற்றத்துடனும் நாமும் அனுசரித்துப் போகவேண்டும். இந்தத் தீர்மானத்துடன் ரஞ்சித்துடன் கைகோத்து களமிறங்கிவிட்டேன்," என்கிறார் ஆர்யா.
'சார்பெட்டா' படத்துக்காக வெகுவாக மெனக்கெட்டபோது தன்னை மனைவி சாயிஷாவும் தன் தாயாரும்தான் அக்கறையுடன் கவனித்துக் கொண்டதாகக் குறிப்பிடுபவர், அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டதாக மகிழ்கிறார்.
"அம்மாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே இருப்பது ஆழமான பிரியம். மும்பையில் பிறந்து வளர்ந்து, பழகிப் படித்து இப்போது எனக்காக சென்னைக்கு இடம்பெயர்ந்துள்ளார் சாயிஷா.
"இது என் மீதான அன்பால் அவர் செய்த காரியம். இப்போது என் அம்மாதான் சாயிஷாவுக்கும் அம்மா," என்று ஆர்யா சொல்வதை மெல்லிய புன்னகையுடன் ஆமோதிக்கிறார் சாயிஷா.
தமக்கு இதைவிட ஒரு நல்ல வாழ்க்கை அமைந்துவிடும் என்று தோன்றவில்லை என்கிறார்.
தன் கணவரின் அன்பும் மனதுக்கு இதமான நடத்தையும் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்பவர், கணவருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார்.