ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படம் 'பகீரா'. பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மொத்தம் ஆறு நாயகிகள். அவர்களுள் அமைரா தஸ்தூருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
"முன்னோட்டக் காட்சித் தொகுப்பைப் பார்த்த பின்னர் இது உளவியல் சார்ந்த, திகில் நிறைந்த படம் என்று எண்ணத் தோன்றும். அதில் தவறில்லை. ஆனால், வெறும் திகில் படமாக மட்டுமே கருதிவிட முடியாது. பல்வேறு அம்சங்களைக் கொண்ட படம் இது.
"மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள ஒருவன் தனது அன்றாட வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை அலசியுள்ளோம்.
"இதில் பிரபுதேவா இரட்டை வேடங்களில் நடிக்கிறார் எனும் சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். என்னால் அதை இப்போதே உறுதி செய்ய இயலாது," என்கிறார் இயக்குநர் ஆதிக்.
இதில் பிரபுதேவா எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அவருக்கு கதை சொல்லச் சென்றபோது எதிர்மறை வேடம் என்றதும் மறுத்துவிடுவார் என்றுதான் ஆதிக் நினைத்துள்ளார். ஆனால், அவர் கொஞ்சம் கூடத் தயங்காமல் நடிக்க சம்மதித்தாராம்.
"எனது ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜன்தான் பிரபுதேவாவிடம் சென்று பேசுமாறு என்னை ஊக்கப்படுத்தினார்.
"இதனால் இயக்குநர் ஏ.எல். விஜய் அண்ணாவிடம் உதவுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்தான் பிரபுதேவா சாரை சந்திக்க வைத்தார்.
"அவரது கதாபாத்திரம் குறித்து பிரபல உளவியல் வல்லுநரிடம் கலந்தாலோசித்தேன். அவர் சில கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தார். அதன்மூலம் படத்தில் உள்ள சில கதாபாத்திரங்களை என்னால் மெருகேற்ற முடிந்தது," என்கிறார் ஆதிக்.
சிறு வயது முதலே இவருக்கு சைக்கோ தனம் நிறைந்த கதாபாத்திரங்களைக் கொண்ட படங்களைப் பார்க்க பிடிக்குமாம். அதனால்தான் அத்தகையதொரு படத்தை இயக்க விரும்பியுள்ளார்.
"இந்தப் படத்தில் ஆறு கதாநாயகிகள் உள்ளனர். அமைரா தஸ்தூர் முதன்மை நாயகியாக நடிக்க ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், காயத்ரி சங்கர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால் ஆகியோரையும் திரையில் காண முடியும்.
"அமைரா தஸ்தூர் மனோதத்துவ நிபுணராக வருகிறார். என்னைப் பொறுத்தவரை எந்தவொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு காதல் அத்தியாயம்தான் இருக்கும் என்பதை ஏற்க இயலாது. எனது முதல் படத்திலும்கூட இக்கருத்தைச் சொல்லி இருக்கிறேன்.
"இளைஞன் ஒருவன் துருதுருப்பாக இருந்தால் அவனைப் பற்றி அறிந்துகொள்ள பெண்கள் விரும்புவார்கள். அத்தகைய இளையர்களில் பகீராவும் ஒருவன். எனவேதான் இத்தனை கதாநாயகிகள் உள்ளனர்.
"அமைராவைப் பொறுத்தவரை உளவியல் வல்லுநர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார் என நினைத்தேன். இதேபோல்தான் மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை அளிப்பர். ஒவ்வொருவரையும் நான் தேர்வு செய்ய குறிப்பிட்ட ஒரு காரணம் உள்ளது," என்கிறார் ஆதிக்.
இந்தப் படம் 'சிகப்பு ரோஜாக்கள்' போல் இருக்கும் என்றும் அந்தப் படத்தின் மறுபதிப்பு என்றும் சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இதையெல்லாம் திட்டவட்டமாக மறுக்கிறார்.
"சைக்கோ வகை திகில் படங்களுக்கு என குறிப்பிட்ட சில வரையறைகள், அகராதி உள்ளன. நூறு ஆண்டு காலமாக உள்ள இந்திய சினிமாவில் சொல்லப்படாத கதைக்களங்களே இல்லை. எனவே, அவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக மாறுபட்டு ஒரு கதையைச் சொல்லிவிட முடியாது.
"'சிகப்பு ரோஜாக்கள்' அருமையான முதன்மையான தமிழ் சினிமா படைப்புகளில் ஒன்று. அந்தக் கோணத்தில் சொல்லப்பட்ட கதைகள் மிகக் குறைவு. எனவேதான் எதற்கெடுத்தாலும் அதனுடன் இணைத்துப் பேசுகிறார்கள்.
"ஆனால், 'பகீரா' உளவியல் சார்ந்த திகில், படம் என்றாலும் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் சொல்லப்படும் கதை," என்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.