ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல் அல்லது அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
கொரோனா விவகாரத்தை அடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். எனினும் தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், சென்னைக்கு அருகே உள்ள கிழக்கு கடற்கரைச்சாலையில் நாளை (மார்ச் 17) ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், திடீரென அது ரத்தாகியுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ரஜினியின் உடல்நிலை காரணமாக டிசம்பர் மாதம் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ஒரே வாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு முன்பாக படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது தயாரிப்புத் தரப்பு.
எனவே மார்ச் மாதம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினால் மட்டுமே குறித்த நேரத்தில் படத்தை வெளியிட முடியும்.