அண்மைக் காலங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை வெடிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டி உள்ளது. ஒருவகையில் இத்தகைய சர்ச்சைகளும்கூட அப்படங்களுக்கு இலவச விளம்பரம்போல் அமைந்துவிடுகின்றன.
இந்நிலையில், தனுஷ் நாயகனாக நடிக்கும் 'கர்ணன்' படம் குறித்தும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்தான் பிரச்சினைக்குக் காரணம்.
குறிப்பிட்ட ஒரு சாதியை இழிவுபடுத்தும் வகையில் அந்தப் பாடல் அமைந்துள்ளதாக ஒரு தரப்பினர் புகார் எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் சாதி ரீதியாக மக்கள் ஒடுக்கப்படுவதையும் இழிவுபடுத்தப்படுவதையும் தனது அறிமுகப் படமான 'பரியேறும் பெருமாளில்' வலியோடு சொன்னவர், இயக்குநர் மாரி செல்வராஜ். அப்படிப்பட்டவர் மீதுதான் சாதியை இழிவுபடுத்தியதாக ஒருதரப்பு பாய்ந்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் திரைகாண உள்ளது 'கர்ணன்'. தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், படத்துக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார் மதுரையைச் சேர்ந்த புல்லட் பிரபு என்பவர்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் 'கர்ணன்' படப் பாடல் பண்டாரம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே குறிப்பிட்ட பாடலில் இடம்பெற்றுள்ள 'பண்டாரத்தி-சக்காளத்தி' எனும் வார்த்தைகளை உள்ளடக்கிய வரிகளை நீக்கவேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது. மேலும், படவெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கவேண்டும், சமூக வலைத்தளங்களில் இடம்பெற்றுள்ள அப்பாடலையும் அதுதொடர்பான பதிவுகளையும் நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் பிரபு அம்மனுவில் கோரியுள்ளார்.
இப்பாடல் தமிழகம் முழுவதும் வசிக்கும் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம், ஜங்கம், யோகிஸ்வரர் ஆகிய சமுதாய மக்களின் மதிப்பைக் கெடுக்கும் வகையில் உள்ளது என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
'கர்ணன்' படக்குழுவினரோ குறிப்பிட்ட பாடல் இடம்பெற்றதற்கு எந்தவொரு தனிப்பட்ட காரணமும் இல்லை என்கிறது. மேலும், பண்டாரம் என்பது பொதுவான பெயர்தான் என்றும் எந்த சாதியையும் இழிவுபடுத்தும் நோக்கத்தில் அவ்வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
ஆனால் இதை ஏற்காத பண்டாரம் சமூகத்தினரின் வீரசேவைப் பேரவையினர் 'கர்ணன்' படத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
வழக்கு தொடுத்துள்ள புல்லட் பிரபுவின் வழக்கறிஞரோ, "மற்ற சமூகப் பெயர்களால் அந்தந்த சமூகப் பெண்களைக் குறிப்பிடும் வார்த்தைகளைச் சினிமாவில் இவ்வாறு பயன்படுத்துவார்களா? பண்டாரத்தியை மட்டும் எப்படிக் குறிப்பிடலாம்," எனக் கேள்விகள் எழுப்புகிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை இழிவுபடுத்தி பாடல் எழுதுவதை அனுமதிக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், தாங்கள் சுட்டிக்காட்டும் பாடல்வரிகளை நீக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என்கிறார்.
"சமூக ஒடுக்குமுறைகள் குறித்துப் பல பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் யுகபாரதி இப்போது ஏன் இப்படி எழுதியுள்ளார்? எனத் தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு தென்மாவட்ட சமூகங்கள் குறித்து அதிக விவரங்கள் தெரியவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
"பண்டாரத்தி என்று குறிப்பிடுவது தவறு என்பது இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் தனுசுக்கும் தெரியாதா?
"மாரி செல்வராஜ் சாதி இழிவுகளுக்கு எதிராகப் பேசி வருகிறார். அதேசமயம் தன் பேச்சுக்கு முரணாகவும் எதிராகவும் இப்பாடலைப் பயன்படுத்துகிறார்," என்று கொந்தளிக்கிறார் வழக்கறிஞர் விஷ்ணுவர்தன்.
இதுகுறித்து கவிஞர் யுகபாரதி தரப்பில் அளித்த விளக்கத்தில், 'கர்ணன்' படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீதுதான் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் உரிய பதிலை அளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வரவில்லை.
இந்நிலையில், சர்ச்சை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போய்விடக்கூடாது என்பதே தனுஷ் ரசிகர்களின் தவிப்பாக உள்ளது. அவரோ மவுனம் காத்து வருகிறார்.
, :
தனுஷ்

