வணிகப் படங்களுக்கு மத்தியில் சமூக அக்கறையுடன் உருவாக்கப்படும் படங்களின் எண்ணிக்கையும் கோடம்பாக்கத்தில் கணிசமாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் 'என்றாவது ஒருநாள்' தனி முத்திரை பதிக்கும் என்கிறார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.
இதில் விதார்த், ரம்யா நம்பீசன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். வறுமையில் வாழ்ந்தாலும் வாழ்க்கை மீதான பிடிப்பை இழக்காத தம்பதியரின் கதை இது.
இரண்டு மாடுகளை தங்கள் குழந்தையைப் போல் பாசமாக வளர்த்து வருகிறார்கள். வாழ்க்கை கொடுக்கும் நெருக்கடியால் அவற்றையும் விற்க வேண்டிய சூழல் உருவாகிறது.
"நகரத்து வாழ்க்கையில் அதிகபட்சமாக நாய்கள், பூனைகள் மீது மட்டுமே மனிதர்கள் பாசம் காட்டுகிறார்கள். ஆனால், கிராமங்களில் மாடுகளுக்கு இருக்கிற நேசிப்பு எல்லாம் வேறு ரகம்.
"கூடி வாழ்வதும் அரிவாளைத் தூக்குவதும் பிறகு கண்ணீர் விட்டு கட்டியணைத்து அழுவதும்தானே கிராமியக் கலாசாரம்! விலங்குகள் மீதான பாசம் இங்கு மனித உறவுகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல.
"இருதரப்புக்கும் இடையே பேச்சுதான் இல்லையே தவிர அத்தனை உணர்ச்சிகளும் இருதரப்புக்கும் புரியும். எனவே, இந்தப் படம் ரசனையும் தவிப்புமாக ரசிகர்களுக்கு காணக்கிடைக்கும்.
"என்னைப் பொறுத்தவரை இத்தகைய பாச, நேசங்களையும் பெண்ணின் மாண்புகளையும் இன்னும் சொல்லித் தீரவில்லை எனத் தோன்றுகிறது," என்கிறார் வெற்றி துரைசாமி.
விதார்த்தும் ரம்யாவும் மிக யதார்த்தமாக நடித்துள்ளதாகக் குறிப்பிடுபவர், படம் பார்க்கும் எவருமே இந்த இருவரது நடிப்பை மட்டும் தனியே குறிப்பிடாமல் ஒட்டுமொத்த படமும் அருமை என்றுதான் சொல்வார்கள் என்கிறார்.
"காரணம், அனைவரது உழைப்பும் அப்படி அமைந்துள்ளது. இந்தப் படத்தின் ஆழத்தில் இருக்கும் ஒருவித அமைதி ரசிகர்களைப் படம் முழுவதும் ஒருவிதத்தில் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும்.
"ரம்யா நம்பீசனை ஒரு கிராமத்துப் பெண்ணாக ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் மனதில் இருந்த நாயகிக்கான சித்திரம் போலவே அச்சு அசலாக அமைந்துவிட்டார்.
"என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படத்தைப் பார்த்த பிறகுதான் கவிஞர் வைரமுத்து 4 பாடல்களை எழுதிக் கொடுத்தார். 'வீடு இல்லாமல் இருப்பதுண்டு மனித சாதி, ஆனால் மாடு இல்லாமல் இருப்பதில்லை உழவர் சாதி' என்ற பாடல் மனதை உருக்கும்.
"மற்ற மூன்று பாடல்களும் படத்தின் உயிரோட்டமாக இருக்கும். ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் ஒவ்வொரு காட்சியிலும் அசத்தி உள்ளார்," என்கிறார் வெற்றி துரைசாமி.
இயக்குநர் வெற்றிமாறன்தான் இவரது மானசீக குருவாம். அண்மையில் இப்படத்தைப் பார்த்த அவர், பல காட்சிகள் மனதை நெகிழச் செய்வதாகப் பாராட்டினாராம். இந்தப் பாராட்டு வெற்றியை உற்சாகப்படுத்தி உள்ளது.
"இது நிச்சயம் சராசரியான படமாக இருக்காது. இது உண்மையான உணர்வுகளின் தொகுப்பு," என்கிறார் வெற்றி துரைசாமி.

