சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார் கங்கனா ரணாவத். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
"இந்திய சினிமாவில் தன்னைவிட சிறந்த நடிகை இல்லை என தாம் நம்புவதாக அண்மையில் தெரிவித்திருந்தார் கங்கனா. இதற்காக கடும் விமர்சனங்களை அவர் திரையுலகத்தினரிடம் இருந்தே எதிர்கொண்டார்.
இந்நிலையில் 'மணிகர்னிகா' படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தது தமக்கு சவாலாக இருந்ததாக கங்கனா கூறியுள்ளார்.
"ஜெயலலிதா குறித்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்ட பிறகே அவரது கதாபாத்திரத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள முடிந்தது. 'தலைவி' படத்தில் நடித்தபோது நான் எதிர்கொண்ட முக்கியமான சவால் என்றால் அது என் உடல் எடையை அதிகரிப்பதுதான்.
"ஜெயலலிதாவின் பிற்பாதி வாழ்க்கை சம்பந்தமான காட்சிகளில் நடிப்பதற்காக என் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என இயக்குநர் கேட்டுக்கொண்டார். அதனால் சுமார் 20 கிலோ அளவுக்கு எடையை அதிகரித்தேன்.
"எனினும் அடுத்த சில வாரங்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது. அதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டேன்," என்று கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
'தலைவி' படம் எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் நடந்துமுடிந்த கையோடு இப்படம் வெளியாகிறது.
அரசியல் ரீதியான காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று கருதப்படுவதால் அரசியல் கட்சியினரும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

