திரையுலகில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறார் சாந்தினி தமிழரசன்.
பொதுவாக தொலைக்காட்சி தொடர் நாயகிகள் திரையுலகில் கால்பதித்துவிட்டால் சின்னத் திரையை மறந்துவிடுவார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக இருதளங்களிலும் நடித்து வருகிறார் சாந்தினி.
"பத்து ஆண்டுகள் திரை உலகில் தாக்குப்-பிடிப்பது பெரிய விஷயம்தான். அதை நினைத்து மகிழ்கிறேன்.
"திறமை, அதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் எனக்குக் கிடைத்த கதாபாத்திரங்களும் நல்லவிதமாக அமைந்தன.
"நான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களும் திரையுலகினரும் என்னை நினைவில் வைத்துள்ளனர். என் பயணம் சிறப்பாகத் தொடர இதுதான் காரணம் என நினைக்கிறேன்," என்று சொல்லும் சாந்தினி விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.
படிப்பை முடித்த கையோடு சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் இவரது கனவாக இருந்துள்ளது.
எனினும் 12ஆம் வகுப்பு முடித்திருந்தபோது 'மிஸ் சென்னை' அழகிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாம். அதன்பிறகுதான் நிறைய படவாய்ப்புகள் தேடிவந்ததாகச் சொல்கிறார்.
"பாக்யராஜ் சார் இயக்கத்தில் 'சித்து +2' படத்தில் அறிமுகமானேன். உண்மையில் சொல்வதானால் அப்போதெல்லாம் நடிப்பின் மீது எனக்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை.
"பாக்யராஜ் சார் சொன்னதை அப்படியே செய்தேன். எனினும் இயல்பாக நடிக்க வருவதாக பாராட்டியதுடன் தொடர்ந்து நடிக்குமாறு உற்சாகமூட்டினார் பாக்யராஜ் சார். அங்கிருந்துதான் எனது பயணம் தொடங்கியது," என்கிறார் சாந்தினி.
சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் சிறு வயதில் அதிக படங்களைப் பார்த்ததில்லையாம். வீட்டில் கண்டிப்புடன் வளர்த்துள்ளனர்.
தனது இரண்டாவது படமான 'படித்துறை'யில் நடிக்கும்வரை சினிமாவில்கூட கிராமங்களைப் பார்த்தது கிடையாதாம். அந்தப் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமானவர் திடீரென விலகிக் கொண்டதால் சாந்தினியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
"முதல் நாளன்றே தாமிரபரணி கரையிலுள்ள ஒரு கிராமத்துப் பெண்ணாக என்னை நடிக்க வைத்தார் இயக்குநர் சுதா. பாவாடை தாவணி அணிந்து பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது என்னை நானே மறந்து போனேன். சொந்தக் குரலில் பேசி நடித்ததும் பெருமையாக இருந்தது," என்கிறார் சாந்தினி.
அதன்பிறகு 'நான் ராஜாவாகப் போகிறேன்', 'வில் அம்பு' என்று அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முடித்துள்ள சாந்தினி முதன்முறையாக தெலுங்கில் 'ராஜா ரங்குஸ்கி'யில் வில்லியாகவும் அசத்தியுள்ளார்.
'கவண்', 'எட்டுத்திக்கும் பற' உள்ளிட்ட படங்களின் மூலம் தொடர்ந்து திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இவருக்கு தொலைக்காட்சி தொடர் வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
அதேசமயம் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 'நான் நீ நாம்', ராதாமோகனின் 'பொம்மை', இயக்குநர் மணி செய்யோன் படம் என கோடம்பாக்கத்திலும் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.
"தொலைக்காட்சி தொடர்களில் நடித்தால் சினிமா வாய்ப்புகள் பறிபோகும் என்றனர். நான் அதை ஏற்கவில்லை. என்னைப் பொறுத்தவரை தொலைக்காட்சி மூலம் கிடைக்கும் புகழ், நான் நடிக்கும் படங்களுக்கான இலவச விளம்பரமாக அமைவதாகவே கருதுகிறேன்.
"இந்தப் புரிதல் எனக்கு அண்மைக் காலத்தில்தான் ஏற்பட்டது. எனவே தயக்கமின்றி தொடர்களிலும் சினிமாவிலும் நடித்து வருகிறேன்," என்கிறார் சாந்தினி தமிழரசன்.
சாந்தினி தமிழரசன்
, :

