ஆர்யா, விஷால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஆர்யா, விஷால் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரையும் இணைய வைத்துள்ளது 'எனிமி'.
இப்படத்தை 'அரிமா நம்பி', 'இருமுகன்', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக மிர்ணாளினியும் ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாசும் நடிக்கின்றனர்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக கடந்த மாதம் படக்குழு துபாய் சென்றிருந்தது. அங்கு அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
முப்பது நாள்களாக துபாயில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
"ஆர்யாவும் விஷாலும் முன்னணி நடிகர்களாக இருப்பதற்கு அவர்களுடைய அர்ப்பணிப்புதான் காரணம். இந்தப் படம் இருவரையும் தமிழ் சினிமாவின் அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும்," என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.

