வில்லியாக நடிப்பதில் தமக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்கிறார் இளம்நாயகி அக்ஷரா கவுடா.
'ஆரம்பம்', 'போகன்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர். இடையில் தெலுங்கு தேசம் பக்கம் சென்றவர் மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.
விரைவில் வெளியீடு காண உள்ள 'சூர்ப்பனகை', 'இடியட்' உள்ளிட்ட படங்களில் அக்ஷராவைக் காணமுடியும்.
"ஏன் இரு நாயகிகள் உள்ள படங்களில் தொடர்ந்து நடிக்கிறீர்கள் என்பதுதானே உங்கள் கேள்வி? எனக்கு முதன்மை நாயகி, இரண்டாம் நாயகி என்று சொல்வதில் எல்லாம் அறவே உடன்பாடு இல்லை. எனக்கு என்ன கதாபாத்திரம் தருகிறார்கள் என்பதை மட்டுமே கவனிப்பேன்.
"இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போது எனக்கு என்ன வேலை என்பதே எனது முதல் கேள்வியாக இருக்கும். அதன்பிறகே தயாரிப்பாளர், நாயகன் மற்ற நடிகர், நடிகைகள் யார் என விசாரிப்பேன்.
"விரைவில் திரைகாணும் 'சூர்ப்பனகை' படத்தில் ரெஜினாவும் உள்ளார். 'இடியட்' படத்தில் நிக்கி கல்ராணியும் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளார். ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலைகளைச் செய்கின்றனர், அவ்வளவுதான்," என்று பக்குவமாகப் பேசும் அக்ஷரா, 'சூர்ப்பனகை'யில் வில்லியாக மிரட்டி உள்ளாராம்.
இதில் தமக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை என்று சொல்பவர், முன்னணி நாயகனாக இருக்கும்போதே விஜய் சேதுபதி 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்திருப்பதை சுட்டிக் காட்டுகிறார்.
"பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் என்றாலும் 'படையப்பா' ரம்யா கிருஷ்ணனைப் பற்றி ரசிகர்கள் இன்றைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'மாஸ்டர்' படத்தில் சேதுபதி சார்தான் வில்லன். ஆனால், சேதுபதி கதாபாத்திரத்துக்கு வில்லன் என்னவோ விஜய்தானே?
"அதேபோன்றுதான் 'சூர்ப்பனகை'யில் எனது கதாபாத்திரத்துக்கு எதிர்மறை சாயல் அதிகம் இருக்கும். ஆனால், நான் ஒரு கதாநாயகியாகவே நினைத்து நடித்தேன்," என்கிறார் அக்ஷரா.
இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ராஜு கதையை விவரிக்கும்போதே, "இந்தக் கதாபாத்திரத்தில் உங்களால் சிறப்பாக நடிக்கமுடியும்," என்று நம்பிக்கை ஊட்டினாராம்.
அவரது வார்த்தைகளைக் கேட்டபோது பெருமையாக உணர்ந்ததாகச் சொல்கிறார். 'இடியட்' படம் முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகி இருக்கிறது என்றும் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம் என்றும் சொல்கிறார்.
"திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் கலகலப்பான மனிதர். நல்ல நண்பராகப் பழகினார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் உற்சாகமாகப் பணியாற்றினோம்," என்று சொல்லும் அக்ஷரா, நல்ல கதைக்களங்கள் அமைந்தால் மட்டுமே படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார். அதனால்தான் படங்களுக்கு இடையேயான இடைவெளி பெரிதாக இருப்பதாகக் கூறுகிறார்.
அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் தமக்கு எப்போதுமே கிடையாது என்று குறிப்பிடுபவர், மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைந்தால் உடனடியாக கால்ஷீட் ஒதுக்கத் தயார் என்கிறார்.
"தமிழ் ரசிகர்கள் அறிவாளிகள். கதை சரியாக இருந்தால்தான் ஒரு படத்தைக் கொண்டாடுகிறார்கள். யார் நடித்துள்ளனர் என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்சம்தான். இத்தகைய ரசனை உணர்வுக்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். ரசிகர்களின் இந்த நல்ல போக்கின் காரணமாகவே கதைகளைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்," என்று சொல்லும் அக்ஷரா, தமிழ்த் திரையுலகில் இது கதாநாயகிகளுக்கான பொற்காலம் என்று வர்ணிக்கிறார்.
நாயகிகளால் திரையுலகில் ஐந்தாறு ஆண்டுகள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்ற காலகட்டமெல்லாம் மலையேறி விட்டதாகக் குறிப்பிடுபவர், நாயகிகள் தனித்து நடிக்கும் படங்களும் வசூல் ரீதியில் வெற்றி பெறுவது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிப்பதாகச் சொல்கிறார்.
"நாயகிகளும் எந்த வயதிலும் முதன்மை வேடத்தில் நடிக்கலாம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலத்துக்கு நாயகிகளாகத் திரையுலகில் வலம் வர முடியும் என்பதை தமிழ்ச் சினிமா நாயகிகள் நிரூபித்துள்ளனர். இத்தகைய காலக்கட்டத்தில் நானும் நடிக்கிறேன் என்பதில் பெருமையாக உணர்கிறேன," என்கிறார் அக்ஷரா. இப்போது தமிழிலும் தெலுங்கிலும் தலா இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ள இவர் புதுக்கதைகளையும் கேட்டு வருகிறாராம்.

