'மாஸ்டர்' திரைப்படத்துக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் எடுக்கப்படும் புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடரப் படக்குழு திட்டமிட்டது.
நேற்று (ஏப்ரல் 6) தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தவுடன் நேற்றிரவு படக்குழுவினர் அனைவரும் ஐரோப்பிய நாடான ஜார்ஜியாவுக்குச் சென்றுள்ளனர்.
நேற்று காலை சைக்கிளில் வாக்களிக்க வந்து பரபரப்பை உண்டாக்கிய விஜய், இரவு ஜார்ஜியாவுக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். சென்னை விமான நிலையத்தில் அவர் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஜார்ஜியாவில் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அவருடன் அபர்ணா தாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வருகிறது படக்குழு. இதற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.