ரகுல்: நல்ல சிந்தனைகளே தேவை
எனது நடிப்பை எவ்வாறு மேன்மேலும் மெருகேற்ற வேண்டும், அதற்கு என்ன செய்ய வேண்டும் எனும் யோசனையுடன்தான் தினமும் காலையில் கண்விழிப்பதாகச் சொல்கிறார் ரகுல் பிரீத் சிங்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகரிப்பது கவலை தருவதாக சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"நல்ல விஷயங்கள் என்பன நமக்கு வெளியே இருப்பவை அல்ல. அவை நம் மனதுக்குள் தோன்றுபவை. உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றுக்கும் தேவையானவற்றை நாம்தான் புகட்ட வேண்டும். நல்ல சிந்தனைகளே நமக்குத் தேவை.
"நமக்குள் இருக்கும் சிறு குழந்தைகளுக்கான தன்மையை எப்போதும் தூண்டிவிட்டபடியே இருப்பது முக்கியம். உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் ஆகியவையே எனது பாதுகாப்பு அரண்களாக உள்ளன," என்கிறார் ரகுல் பிரீத் சிங்.
குழந்தைக்கு பெயர் வைத்த சேதுபதி
விஜய் சேதுபதி பச்சிளம் குழந்தை ஒன்றை உச்சி முகர்ந்து கொஞ்சும் காட்சியுடன் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அது அவரது தீவிர ரசிகரின் குழந்தையாம். அக்குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு ரசிகர் கேட்டுக்கொள்ள 'துருவன்' என்ற பெயரைத் தேர்வு செய்தாராம் சேதுபதி.
அப்போது குழந்தையைக் கொஞ்சி தலையில் முத்தமிட்டபோது எடுக்கப் பட்ட படம்தான் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. சேதுபதி மற்றவர்களிடம் அதிக பாசம் காட்டுபவர் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
'வலிமை' தமிழக உரிமை விற்பனை
'வலிமை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை 60 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாகத் தகவல்.
இந்த உரிமையைப் பெற்றுள்ள இரு நிறுவனங்கள் கூடுதலாக ரூ.20 கோடி லாபம் வைத்து ரூ.80 கோடிக்கு தமிழக விநியோகஸ்தர்களிடம் விற்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் முன்பே படத்தின் வியாபாரம் லாபகரமாக முடிந்ததால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
'வலிமை'யில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சியை மட்டும் படமாக்க வேண்டி உள்ளதாம். அதற்காக 5 நாள் பயணமாக வெளிநாட்டுக்குப் பறக்க உள்ளது அப்படக்குழு.
அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அவர் பின்னணிக் குரல்பதிவை முடித்துவிட்டதாகத் தகவல்.
குறித்த நேரத்தில் பட வேலைகள் நடந்து முடிந்திருப்பதாகக் கூறி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

