எத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வெளிப்படையாகப் பேசுவது என்ற தமது நிலைப்பாட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மாறுவதாகத் தெரியவில்லை. இப்படி இருப்பதுதான் தமது கொள்கை என்கிறார்.
பிள்ளைகள் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது தவறு என்றால் அத்தவறைத் தொடர்ந்து செய்வதில் தமக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று சொல்லும்போது யாஷிகாவின் குரலில் உறுதியும் தைரியமும் தெரிகிறது.
"போலியாக, பொய்யாகப் பேசாவிட்டால் அதை குறைகூற வேண்டுமா? ஒருசிலருக்கு இத்தகைய மனப்போக்கு இருப்பது ஆச்சரியமும் வேதனையும் அளிக்கிறது. பொய்களைப் பேசுவது எளிது. ஆனால், என்றேனும் ஒருநாள் உண்மை வெளிப்படும். அப்போது நமது குணாதிசயத்தின் பிம்பம் உடைந்து நொறுங்கிவிடும்.
"எனவே, நல்லதோ கெட்டதோ எப்போதும் உண்மையை மட்டுமே பேசவேண்டும். எந்த காலத்திலும் பெற்றோரிடம் பொய் சொல்லக்கூடாது. அப்போதுதான் நிம்மதியாகத் தூக்கம் வரும்," என்கிறார் யாஷிகா.
ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே இவரது தாயார் இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறித்தான் வளர்த்தாராம்.
தனது தாயாரின் அன்பான அறிவுரைகளும் வெளிக்காட்டிய தைரியமும்தான் தம்மைத் துணிச்சல் மிகுந்த பெண்ணாக வளர்த்திருக்கிறது என்று குறிப்பிடும் யாஷிகா, தாம் ஒரு நடிகை, மாடல் அழகி என்பதால் சமூகத்தாலும் ரசிகர்களாலும் மிக அணுக்கமாக கவனிக்கப்படுவதாகச் சொல்கிறார்.
தாம் வெளிப்படையாக தைரியமாகப் பேசுவதற்கு இதுததான்காரணம் என்று குறிப்பிடுபவர், சில சமயங்களில் சமூக அக்கறையுடன் தாம் தெரிவிக்கும் கருத்துகள் வேண்டுமென்றே சிலரால் சர்ச்சையாக்கப்படுகிறது என்கிறார்.
சென்னையில் இருக்கும்போது இவர் வெளியே செல்வதற்கு பெரும்பாலும் கார்களைப் பயன்படுத்துவதில்லை. தனது புல்லட் வாகனத்தில்தான் வலம் வருகிறார்.
பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே புல்லட் ஓட்டக் கற்றுக்கொண்டாராம். ஆனால், 18 வயது ஆனதும் ஓட்டுநர் உரிமம் பெற்றபிறகே தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லலாம் என்று இவரது தந்தை திட்டவட்டமாகக் கூறிவிட்டாராம்.
"அதுவரை பொறுமையாகக் காத்திருந்து புல்லட் ஓட்டும் கனவை நனவாக்கினேன். எந்த ஒரு தருணத்திலும் தலைக்கவசம் அணியாமல் ஓட்டமாட்டேன். பெண்கள் புல்லட் ஓட்டுவது ஒன்றும் உலக அதிசயமல்ல. பல நாடுகளில் பெண்கள் புல்லட்டில் தைரியமாகச் சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.
"என் முகம் தெரிகிறதோ இல்லையோ இளையர்கள் பலர் நான் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அருகே வந்து மோதுவதுபோல் தங்கள் வாகனத்தை வளைத்து, நெளித்து ஓட்டுவார்கள். அப்போதெல்லாம் சிரிப்பாக வரும். புல்லட் பயணத்தை எப்போதுமே ரசிப்பேன்," என்று சொல்லும் யாஷிகா அண்மையில் துபாய் சென்றபோது 'ஸ்கை டைவிங்' செய்து அசத்தியுள்ளார்.
அதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிட்ட காணொளிப் பதிவுகளுக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளதாம். 'சல்பர்' என்ற தலைப்பில் உருவாகும், நாயகியை மையப்படுத்தும் கதையில் இவர்தான் நாயகி. காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அந்தப் படத்தில் இடம்பெறும் காட்சிக்காகத்தான் இவர் விமானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் காட்சி படமாக்கப்பட்டதாக வெளியான தகவலை மறுக்கிறார்.
"சல்ஃபர்' படத்தில் நிறைய சண்டைக்காட்சிகள் உள்ளன. பொதுவாக காவல்துறை அதிகாரியாக நடிப்பதற்கு நடிகைகள் விஜயசாந்தியைத்தான் முன்மாதிரியாகக் கருதுவார்கள். நானும் அப்படித்தான். அவரைப் போன்றே 'டூப்' இல்லாமல் சண்டைக்காட்சிகளில் நடிக்கிறேன்.
"அந்தக் கதாபாத்திரத்துக்கான மனநிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே சில சாகசங்களில் என்னை வலிய ஈடுபடுத்திக் கொள்கிறேன். 'சல்பர்' படத்துக்கு இசையமைத்து எதிர்மறை நாயகனாகவும் நடித்துள்ளார் சித்தார்த் விபின்."
கவர்ச்சிக்குத்தான் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறீர்களாமே? என்று கேட்டால் யாஷிகாவின் அழகு முகத்தில் கோபம் எட்டிப் பார்க்கிறது. 'சல்பர்' படத்தில் துளிகூட கவர்ச்சிக்கு இடமிருக்காது என்று சுட்டிக் காட்டுகிறார்.
"கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களிலும் கூட என்னை நடிக்க அழைக்கிறார்கள். 'சல்பர்' மூலம் முதன்முறையாக எனது நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் படம் வெளியானதும் எனது திறமை குறித்து ரசிகர்கள் அதிகம் பேசுவர். இது நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது," என்கிறார் யாஷிகா.
அடுத்து வெங்கட் ராகவன் இயக்கும் 'கடமையைச் செய்' என்ற படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக நடிக்கிறார். இது குடும்ப நகைச்சுவைப் படமாக உருவாகிறது.
"கடினமான காட்சிகளிலும் ஒத்திகையின்றி ஒரே டேக்கில் எப்படி நடிக்கவேண்டும் என்பதை எஸ்.ஜே.சூர்யா சாரிடம்தான் கற்றுக் கொண்டேன்," என்கிறார் யாஷிகா.