சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது 'ஹாஸ்டல்'.
அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் இப்படம் இளையர்களை நிச்சயம் கவரும் எனப் படக்குழுவினர் இப்போதே உத்தரவாதம் அளிக்கின்றனர்.
இது முழு நீள நகைச்சுவைப் படம் என்றும் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கும் என்றும் சொல்கிறார் இயக்குநர். அது மட்டுமல்ல, இதில் காதல், டூயட் பாடல்கள் ஆகியவற்றுக்கு அறவே இடம் இல்லையாம்.
சரி... அப்படியென்ன சுவாரசியமான கதை?
அசோக் செல்வனுடன் ஏற்படும் சின்ன தகராறு காரணமாக அவர் பயிலும் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து அவரை மிரட்டுகிறார் பிரியா பவானி சங்கர். இதை அவர் விளையாட்டாகச் செய்யப்போய் எதிர்பாராவிதமாக அங்கே மாட்டிக்கொள்கிறார்.
ஆண்கள் விடுதிக்குள் ஒரு பெண் இருப்பதைப் பார்த்தால் அதன் கண்காணிப்பாளரான நாசர், சம்பந்தப்பட்ட மாணவனை கல்லூ ரியை விட்டே அனுப்பிவிடுவார். அவரது கண்ணிலும் அவருடைய உதவியாளராக வரும் முனீஸ்காந்த் பார்வையிலும் படாமல், பிரியா பவானி சங்கரை வெளியே அனுப்ப அசோக் செல்வன் என்ன பாடு படுகிறார் என்பதுதான் கதை.
எனவே இந்தக் கதையில் காதல் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் ஒரே இடத்தில் நடக்கும் கதை என்பதால் வெளிப்புற படப்பிடிப்பு, அதிக செலவு என்றெல்லாம் மெனக்கெடவில்லை என்றும் படக்குழு தெரிவிக்கிறது.
"இது மூன்று நாள்கள் நடக்கும் கதை. இதில் கட்டுப்பாடுகள் மிக்க கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம். விடுதி வாழ்க்கையைக் கடந்து வந்தவர்களுக்கு ரகளையான நினைவூட்டலாகப் படம் இருக்கும்.
"அப்படிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்காதவர்களை ஏங்க வைக்கும். அவ்வளவு கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டுவந்திருக்கிறோம். நாசருக்குக் கீழே வேலை செய்யும் முனீஸ்காந்துக்கும் மாணவர்களுக்கும் ஆகவே ஆகாது.
"எப்போது வாய்ப்பு கிடைக்கும், வார்டனிடம் மாணவர்களை மாட்டிவிடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார் முனீஸ். விடுதிக்கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்துவிடும். இதனால் மாணவர்களைத் தற்காலிகமாக வேறொரு பழைய கட்டடத்துக்கு மாற்றும் போதுதான் இந்தக் கதை நடக்கிறது.
"அந்தக் கட்டடத்தில் அறந்தாங்கி நிஷா ஓர் எதிர்பாராத கதாபாத்திரமாக வருகிறார். இன்னொரு பக்கம் மகளைக் காணவில்லையே என்று பிரியா பவானி சங்கரின் தந்தை தேடிக்கொண்டிருப்பார். இப்படிச் செல்கிறது திரைக்கதை," என்கிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன்.
இப்படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமக்கு முழுமையான நகைச்சுவை வேடம் கிடைத்திருப்பதாக நாசர் கூறினாராம்.
போபோ சசி இசையமைத்துள்ள இப்படத்தில் ரவி மரியா, சதீஷ், பாவா லட்சுமணன், கலைராணி, யோகி, கிரிஷ் என பலர் துணைக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள். கோடை கால வெளியீடாக வருகிறது 'ஹாஸ்டல்'.

