அண்மைக்காலமாக கவுதம் கார்த்திக் குறித்து புதுத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படும் நிலையில், அவர் தமிழில் அடுத்தடுத்து நடிக்கும் படங்களைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கிருஷ்ணன் இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார் கவுதம். முதல் முறையாக இதில் சிம்புவுடன் இணைந்துள்ளார்.
இதையடுத்து 'செல்லப்பிள்ளை' என்ற படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். இரண்டுமே முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்களாம்.
'ஹர ஹர மஹா தேவகி', 'இருட்டறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட படங்களில் நடித்த வகையில் சில சர்ச்சைகளில் சிக்கினார் கவுதம். சமூக வலைத்தளங்களில் பலத்த விமர்சனங்களுக்கும் ஆட்பட்டார். இதையடுத்து கதைகளைத் தேர்வு செய்வதில் கவனமாக உள்ளாராம்.
தற்போது சிம்புவுடன் இணைந்து நடிக்கும் 'பத்து தல' படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல் 'செல்லப்பிள்ளை' படமும் ரசிகர்களைக் கவரும் வகையில் உருவாகிறதாம்.
'செல்லப்பிள்ளை'யின் சுவரொட்டி வெளியாகி உள்ளது. இதை விஜய் சேதுபதி, சூரி, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
"நம் தேசத்தின் செல்லப்பிள்ளை நேதாஜியின் 125ஆம் ஆண்டு கொண்டாட்டமாக வெளிவரும் இந்த 'செல்லப்பிள்ளை'க்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்," என நடிகர் சூரி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் உருவாகிறது 'செல்லப்பிள்ளை' திரைப்படம்.
இதில் கிராமப்புறத்து இளையர் வேடத்தில் நடிக்கிறார் கவுதம். ஒட்டுமொத்த கிராமமும் அவரை செல்லப்பிள்ளையாக கருதி கொண்டாடுகிறது.
அந்த மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும்போது அவர் பொங்கி எழுகிறார். பின்னர் அந்த மக்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதுதான் கதையாம்.
ஃபிரோஸ் ஹுசைன் தயாரிக்கும் இந்தப் படத்தின் மோஷன் சுவரொட்டியில் நேதாஜி குறித்த பல சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
"சில படங்களில் நடிக்கும்போது நம்மையும் அறியாமல் சில விஷயங்களை கற்றுக் கொள்வோம். அனுபவம்தான் ஒவ்வொரு தனி மனிதனையும் பக்குவப்படுத்துகிறது. அந்த வகையில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து நன்கு யோசித்து முடிவுகளை எடுக்க கற்று வருகிறேன்.
"நான் அடுத்து நடிக்கும் படங்கள் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறேன்," என்கிறார் கவுதம் கார்த்திக்.
தற்போது வித்தியாசமான கதைக்களங்கள் அமைவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
கவுதம் கார்த்திக்

