சண்டைப் பயிற்சி பெற்ற காஜல்
புதுப்படம் ஒன்றில் சண்டைக் காட்சிகளில் பங்கேற்று அசத்தி உள்ளாராம் காஜல் அகர்வால்.
பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி' படத்தின் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
"சண்டைப் பயிற்சியாளர் ஜெகன் மாஸ்டர்தான் எனக்குப் பயிற்சி அளித்தார். அதனால் சண்டைக்கான அனைத்து அசைவுகளையும் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது. கடந்த பிப்ரவரி மாதமே படப்பிடிப்பை முடித்துவிட்டோம். எனவே, மிக விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் காஜல் அகர்வால்.
முதன்முறையாக இந்தப் படத்தில் காஜலுக்கு இணை என்று யாரும் இல்லையாம். ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், கே.எஸ். ரவிக்குமார், யோகிபாபு, மயில்சாமி, 'ஆடுகளம்' நரேன் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஷ்ருதி
'வாட்ஸ் அப்' தொடர்பு எண்களை அளிக்குமாறு நச்சரித்த ரசிகருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் ஷ்ருதி ஹாசன்.
அண்மையில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்க ளிடம் உரையாடினார் ஷ்ருதி ஹாசன். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் சுவாரசியமாகப் பதிலளித்தார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற ஒரு ரசிகர், 'மேடம், உங்களது வாட்ஸ் அப் எண்ணை தெரிவியுங்கள்' என்று கேட்க, அதற்கு காவல்துறையின் அவசர உதவிக்கான 100 என்ற எண்ணைக் குறிப்பிட்டார் ஷ்ருதி.
அவரது இந்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ஷ்ருதி.
அவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'கிராக்', 'வக்கீல் சாப்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கீர்த்தியை மகிழ வைத்த ஓவியங்கள்
உலக ஓவிய தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 15ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் அவரை மகிழ்ச்சிப்படுத்தி உள்ளனர்.
அன்றைய தினம் ஓவியத் திறமையுள்ள ரசிகர்கள் கீர்த்தியை அழகான ஓவியங்களாகத் தீட்டி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அந்த அழகான ஓவியங்களைக் கண்டு தாம் நெகிழ்ந்து போனதாக குறிப்பிட்டுள்ள கீர்த்தி, இத்தகைய ரசிகர்களால் ஒவ்வொரு நாளும் சிறந்த ஓவிய நாளாக அமைவதாக தெரிவித்துள்ளார். தற்போது 'சாணி காயிதம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி.
ரியோ படம் 30ஆம் தேதி வெளியீடு
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'பிளான் பண்ணி பண்ணனும்' படம் எதிர்வரும் 30ஆம் தேதி வெளியாகி றது. இதில் 'பிக்பாஸ்' பிரபலம் ரியோ நாயகனாகவும் அவரது ஜோடியாக ரம்யா நம்பீசனும் நடித்துள்ளனர். மேலும் பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை ஆகிய மூவரும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

