கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் தம்மை வில்லனாக நடிக்கக் கேட்டுள்ளதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
எனினும் தனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அதில் நடிப்பது என அவர் முடிவு செய்துள்ளாராம்.
'மாஸ்டர்' படத்தை முடித்த பிறகு கமல் நடிக்கும் 'விக்ரம்' என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். பட அறிவிப்பை வெளியிட்ட கையோடு முதற்கட்டப் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்துவிட்டதால் கமலும் படப்பிடிப்பில் பங்கேற்கத் தயாராகிவிட்டார். இந்நிலையில் கமலுடன் மோதும் வில்லனாக மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிப்பதாக தகவல் வெளியானது.
'விக்ரம்' படத்தில் நடிப்பதை பகத்தும் ஒப்புக்கொண்டார். இதனால் அவர்தான் வில்லன் என்று கருதப்பட்டது. இந்நிலையில் படக்குழுவினர் விஜய் சேதுபதியை அணுகியிருப்பது தெரியவந்துள்ளது.
"கமல் சார் படத்தில் நடிக்க இயலுமா என்று கேட்டு என்னை அணுகியிருப்பது உண்மைதான். ரசிகர்கள் நினைப்பது போல் வில்லன் கதாபாத்திரத்துக்காகத்தான் என்னை அழைக்கின்றனர். ஆனால், நான் இன்னும் கால்ஷீட் ஒதுக்கவில்லை.
"இந்தப் படத்தில் நடிப்பேனா என்பதை இப்போதே உறுதி செய்ய இயலாது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், பகத் ஃபாசில் என்று இரண்டு சிறந்த கலைஞர்கள் நடிக்கின்றனர். எனவே, நானும் அவர்களிடம் இணையவேண்டும் என்றால் ஏதாவது தனித்தன்மையுடன் அந்தக் கதாபாத்திரத்தை மெருகேற்ற வேண்டும். இல்லையென்றால் அந்தப் படத்தில் நடிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை," என்கிறார் விஜய் சேதுபதி.
தாம் நடித்த தெலுங்குப் படம் 'உப்பெணா' வசூலில் சாதித்தாலும் மொழி தெரியாததால் அப்படத்துக்கான வசனங்களை தாமே சொந்தக் குரலில் பேச முடியாமல் போய்விட்டது என வருத்தப்படுகிறார்.
"எனக்கு தெலுங்கில் சரியாகப் பேச வராது. அதனால் 'உப்பெணா'வில் வேறு ஒருவர் எனக்காகப் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். நானே வசனங்களைப் பேசி நடித்தால்தான் எல்லாம் இயல்பாக இருக்கும். நமது நடிப்பும் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக இருக்கும். அவ்வாறு நடக்கவில்லை என்பதில் வருத்தம் உள்ளது," என்கிறார் விஜய் சேதுபதி.
இதற்கிடையே கமல் படத்தில் சேதுபதி நடிக்கவில்லை என்பதும்கூட நல்ல தகவல்தான் என்று கமல் ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காரணம், அண்மையில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் வில்லனாக நடித்துள்ள சேதுபதியின் நடிப்பு விமர்சகர்கள், ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
விஜய்யை விட சேதுபதியின் நடிப்பு மனதைக் கவர்வதாக கருத்துகள் வெளிப்பட்டன. 'விக்ரம்' படத்திலும் அதுபோல் ஆகிவிடக்கூடாது என்று கமல் ரசிகர்கள் கருதுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

