தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாம் அளித்த வாக்குறுதியின்படி பெண் ஆட்டோ ஓட்டுநருக்குப் புதிய கார் வாங்கிப் பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா.
சில மாதங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சமந்தாவிடம் அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநர் தமது சிரம நிலையை விவரித்தார்.
தமக்கு ஏழு சகோதரிகள் இருப்பதாகவும் பெற்றோர் காலமாகிவிட்டதால் அவர்களைக் கரைசேர்க்க ஆட்டோ ஓட்டி வருமானம் ஈட்டுவதாகவும் அந்தப் பெண் ஓட்டுநர் கூறினார்.
எனினும் தமக்குப் போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்று அந்தப் பெண் கூறியதைக் கேட்டு நெகிழ்ந்துபோனார் சமந்தா. தமது செலவில் ஒரு கார் வாங்கித் தருவதாக உறுதி அளித்தவர், அதை வைத்துப் பயண நிறுவனம் நடத்தி அதிக வருமானம் பெறலாம் என்றும் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் தாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் வகையில் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை அந்தப் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் சமந்தா. அவரது மனித நேயத்தை பலர் பாராட்டியுள்ளனர்.

