நடிகர் விவேக் வழியைப் பின்பற்றி தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒருசிலர் இப்போதே அந்தப் பணியைத் துவங்கிவிட்டனர். அவர்களில் இளம்நாயகி ஆத்மிகாவும் ஒருவர். விவேக் நினைவாக தமது வீட்டில் மரக்கன்றுகளை நட்டுள்ளார் இவர். இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் தேவை ஆகியவற்றை எல்லாம் முன்கூட்டியே நன்கு உணர்ந்துள்ளார் விவேக் சார். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய இந்த உன்னதப் பணியைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் துவங்கி உள்ளார். "ஒரு கோடி மரங்களை நடவேண்டும் என்ற அவரது மகத்தான கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும்," என்று ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண் விஜய்யும் தனது தந்தையும் நடிகருமான விஜயகுமார், தனது மகனுடன் சேர்ந்து தம் வீட்டில் மரக்கன்றுகள் நட்டார்.
இந்நிலையில் விவேக்கைத் தவிர தமக்கு யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார் அவரது மேலாளரும் நெருங்கிய நண்பருமான செல்முருகன்.
கடந்த பல ஆண்டுகளாக விவேக்கின் மேலாளராக இருந்து வந்த செல் முருகன், பல திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளில் விவேக்குடன் இணைந்து நடித்துள்ளார். அக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
திரைப்படங்களுக்கான விவேக்கின் நகைச்சுவைப் பகுதியை உருவாக்குவதில் செல் முருகனும் முக்கியப் பங்கு வகித்தார்.
"எல்லோருமே முருகன்தான் துணை என்பார்கள்; இனி முருகனுக்கு யார் துணை? விடை இல்லாமல் விரக்தியில் கேட்கிறேன். யார் துணை?" என்று செல் முருகன் தமது பதிவில் குறிப்பிட்டிருப்பது திரையுலகத்தினரை நெகிழ வைத்துள்ளது. அவருக்கு ஏராளமானோர் ஆறுதல் கூறியுள்ளனர்.

