, :
ராஷ்மிகா மந்தனா
அமிதாப்பச்சன் போன்ற பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து அமையவேண்டும் என தன் மனம் ஏங்குவதாக சொல்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இந்தியிலும் தற்போது அதிக வாய்ப்புகள் தேடிவருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப்பச்சனுடன் 'குட்பை', 'மிஷன் மஞ்சு' உள்ளிட்ட இந்திப் படங்களில் ராஷ்மிகாவைப் பார்க்கமுடியும். இப்படிப்பட்ட வாய்ப்புகளுக்காக தாம் ஏங்கியதுண்டு என்று கூறுகிறார்.
அமிதாப்பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பு தம்மைத் தேடி வந்திருப்பதாக சொன்னபோது இவரது பெற்றோர் அறவே நம்பவில்லையாம். 'நீ சொல்வது உண்மையா? அல்லது வேண்டுமென்றே பொய் சொல்லி விளையாடுகிறாயா?' என்று பலவிதமாக கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார்களாம்.
அதன்பிறகு தன் தலையில் அடித்து சத்தியம் செய்த பிறகே பெற்றோர் அந்தத் தகவலை நம்பியதாகச் சொல்கிறார்.
"அடுத்த சில தினங்களிலேயே எனது நண்பர்கள் தமிழ், தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் என்று அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டது. இந்தியில் அறிமுகமாவதும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிப்பதும் தாம் எதிர்பாராத ஒன்று," என்கிறார் ராஷ்மிகா.
அமிதாப்பச்சன் மீது இவரது பெற்றோருக்கு மிகுந்த மரியாதை உள்ளதாம். இருவருமே அவரது ரசிகர்களாம்.
"அமிதாப்பச்சனுடன் நடிக்கப் போகிறாய். எனவே, ஆசிரியர் முன்பு நிற்கும் ஒரு மாணவி போன்று மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினர். படப்பிடிப்பில் நடந்தவற்றை எல்லாம் அவர்களுக்கு அவ்வப்போது தெரிவிப்பேன்.
"படப்பிடிப்பின்போது அமிதாப்பச்சன் சாரைக் கண்டதும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. அவர் நம்மையெல்லாம் கண்டுகொள்வாரா என்றுகூட யோசித்தேன். ஆனால் அவர் பெரிய நடிகர் என்றெல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக என்னுடன் பேசினார்.
"நான் சொல்வதையும் பொறுமையாக காது கொடுத்துக் கேட்டார். அவருடன் பேசிய அந்த நொடியிலேயே பதற்றம் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டேன்," என்கிறார் ராஷ்மிகா.
அமிதாப்பச்சன் மட்டுமல்லாமல், மற்ற திரை உலகுகளைச் சேர்ந்த சிரஞ்சீவி, மோகன்லால், கமல்ஹாசன், ரஜினி உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் ராஷ்மிகா.
இவரைப் போலவே விஜய் பட நாயகி பூஜா ஹெக்டேவுக்கும் ஒரு ஏக்கம் இருக்கிறது. ஆனால் அது சினிமா துறை சம்பந்தப்பட்டதல்ல.
வேறொன்றுமில்லை... முகக்கவசம் அணியாமல் பழையபடி இயல்பான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே பூஜாவின் ஏக்கமாம். முன்பு சுதந்திரமாகவும் உற்சாகமாகவும் சுற்றித் திரிந்தது போல் இப்போது செய்யமுடியாது என்பது வருத்தமளிப்பதாக அண்மைய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
"கொரோனாவுக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கை என்று நிலைமை மாறிவிட்டது. அந்தக் கிருமி எல்லோரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரையும் தாக்கும் அந்தக் கிருமியிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற சூழ்நிலை வேதனை அளிக்கிறது," என்கிறார் பூஜா.
இப்படி எங்குமே சுதந்திரமாக இருக்க முடியவில்லை என்பது சில சமயங்களில் எரிச்சலூட்டுவதாகக் குறிப்பிடுபவர், முகக்கவசமற்ற மனித வாழ்க்கை என்பது இனி சாத்தியப்படுமா என்பதே தெரியவில்லை என்கிறார்.
"உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் முகக்கவசம் அணியாமல் வாழும் வாழ்க்கை எப்போது வருமோ எனும் ஏக்கம் மனதுக்குள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு நாள் விரைவில் வந்தால் அதுவே வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான தருணமாக எனக்கு அமையக்கூடும்," என்கிறார் பூஜா ஹெக்டே.

