கலைக்கு மொழி, நாடு என்கிற எல்லைகள் ஏதுமில்லை. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார் ஸ்டெஃபி படேல்.
அழகிப் போட்டிகளில் அசத்தும் இவரை 'பார்டர்' படத்தின் மூலம் தமிழ் பேச அழைத்து வந்துள்ளனர்.
அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கவர்ச்சியிலும் இளமை துள்ளும் நடிப்பிலும் ரசிகர்களை கிறங்கடிக்க உள்ளார் ஸ்டெஃபி. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா', 'டீன் மாடல் இண்டர்நேஷனல்' பட்டத்தை வென்றவர். இவரது தந்தை அமரேந்திரன் ஒரு தொழிலதிபர். தாயார் மாதுரி குடும்பத் தலைவி. ஒரு அண்ணன், ஒரு தம்பி, ஒரு தங்கை என மூன்று உடன்பிறப்புகளைக் கொண்டிருப்பவர், அவர்கள் மூவரும்தான் தமது உயிர் என்கிறார்.
"எனது தந்தையின் குடும்பம் மிகப் பெரியது. எல்லோரும் பாசமாகப் பேசிப் பழகுவார்கள். எங்கள் குடும்பமும் பாசத்தால் பிணைக்கப்பட்டதுதான். ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பை முடித்த கையோடு 'மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் பங்கேற்றேன். அதில் இறுதிச்சுற்று வரை முன்னேறியதையே பெரிய வெற்றியாகக் கருதுகிறேன். பள்ளி இறுதி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் 'மிஸ் டீன்' பட்டம் கிடைத்தது," என்கிறார் ஸ்டெஃபி படேல்.
அந்தச் சமயத்தில் ஒரு பற்பசை விளம்பரத்தில் நடித்தாராம். அதுதான் சினிமா வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளது. இப்போது இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் தலா ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டெஃபி.
அதுமட்டுமல்ல, 'பேட்டில் ஆஃப் டிஃபன்ஸ்' என்ற சீன- ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளாராம். ஸ்டெஃபியின் குடும்பத்தில் மருத்துவர், பொறியியலாளர், ஐஏஎஸ் அதிகாரி எனப் பலர் முக்கியப் பதவிகளில், பணிகளில் உள்ளனர். இவருக்கு மட்டும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டதாம். தனது தாயும் பாட்டியும்தான் அழகுணர்ச்சியை ஊட்டியவர்கள் என்கிறார். சிறு வயதிலேயே மாறுவேடப் போட்டியில் தேவதையாக ஒப்பனையிட்டுப் பங்கேற்பது, நடனமாடுவது எனப் பலவகையிலும் தமது ஆர்வத்தையும் ஆசையையும் வெளிப்படுத்தி உள்ளார்.
"அந்த ஈடுபாடும் திறமையும்தான் சினிமா என்ற கனவுலகில் எனக்கென ஓர் இடத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது. சீன ஹாலிவுட் படத்தில் 'நார்த்தா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படத்துக்காக இந்தியா, தென்கொரியா, தாய்லாந்து, பிலிபீன்ஸ், ஐரோப்பாவில் இருந்து தலா ஒரு நடிகரைத் தேர்ந்தெடுத்தனர்.
"இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான நடிகைகள் வாய்ப்புக்காக முயற்சி செய்தனர். ஆனால் நடிப்புத் தேர்வின் முடிவில் நான்தான் தேர்வு பெற்றேன். சினிமா வாழ்க்கையின் துவக்கத்திலேயே உலகளவில் தயாராகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
"அதிலும் கடும் போட்டிக்கு மத்தியில் தேர்வு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேசமயம் அதிர்ஷ்டமும் என் பக்கம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை," என்கிறார் ஸ்டெஃபி.
இந்திய-சீன எல்லைப் பகுதியில் நடக்கும் கதைதான் படமாக்கப்படுகிறது. எனவே, காட்சி அமைப்பு பரபரப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமது தாய்நாட்டின் எல்லையை இன்னொரு நாடு ஆக்கிரமிப்பதை தம்மால் சகித்துக்கொள்ள இயலாது என்று தமது தேசப்பற்றை வெளிப்படுத்துகிறார் ஸ்டெஃபி.
இந்திய நாட்டுக் குடிமகளாகத் தமது தாய்நாடும் அதன் நலனும்தான் மற்ற அனைத்தையும் விட தமக்குப் பெரிது என்கிறார்
"இந்தியா, சீனா என்றில்லை, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டினுடைய இறையாண்மையும் மதிக்கப்பட வேண்டும். அனைத்து நாடுகளும் நட்புடன் இருப்பதே மனித குலத்துக்கு நல்லது," என்று பொறுப்புடன் பேசும் ஸ்டெஃபி, தமிழில் நடிக்கும் 'பார்டர்' படத்தில் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம். படத்தின் நாயகன் அருண் விஜய்யின் நடிப்பும் அவர் நட்பு பாராட்டிய விதமும் தம்மை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்கிறார்.
"துப்பாக்கி தூக்கிச் சண்டை போடவில்லை. ஆனால் துப்பாக்கி தோட்டா போல் பாய்ந்து செல்லும் திரைக்கதையில் எனக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கதைப்படி நான் அருண் விஜய்யின் காதலி. 'பார்டர்' வெளியானதும் தமிழில் நல்ல வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்," என்கிறார் ஸ்டெஃபி.
ஒரு குடும்பமாக ஒருவரை ஒருவர் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல விஷயத்தைத் தமிழக மக்களிடம் இருந்து கற்றுக்கொண்டதாக கூறும் ஸ்டெஃபி, 'பார்டர்' படக்குழுவில் உள்ள அனைவருமே தம்மை அன்புடன் கவனித்துக் கொண்டதாக நெகிழ்கிறார்.
, :
ஸ்டெஃபி படேல்

