சில எதிர்பாராத தாமதங்கள் ஏற்பட்டாலும் 'தளபதி 65' பட வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது.
ஜார்ஜியா நாட்டில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்து ஊர் திரும்பியுள்ளனர் அப்படக்குழுவினர்.
ஜார்ஜியாவில் எத்தகைய சூழலில் படப்பிடிப்பு நடைபெற்றது என்பது குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கும் கொரோனா கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவாம்.
இரவு 9 மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என்பதால் மாலை 7 மணிக்குள் படப்பிடிப்பை முடித்து படக்குழுவில் இருந்த அனைவரும் தத்தமது தங்கும் விடுதி அறைகளுக்குத் திரும்பி விடுவார்களாம்.
இம்மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது தனது வாக்கைச் செலுத்திய கையோடு ஜார்ஜியாவுக்குப் புறப்பட்டார் விஜய். அதற்கு முன்பாகவே படக்குழுவைச் சேர்ந்த பலர் அங்கு சென்று படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கிவிட்டனர். சுமார் 12 மணி நேர பயணத்துக்குப் பிறகு டிபிலிசி நகரைச் சென்றடைந்துள்ளார் விஜய். அங்கு படப்பிடிப்பு துவங்கும் முன்பு அங்குள்ள கட்டுப்பாடுகளின்படி மூன்று நாள்கள் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதன்பிறகு மூன்று நாள்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த இருவருக்கு ஜார்ஜியா சென்றடைந்ததுமே உடல்நலம் பாதிக்கப்பட்டதாம். இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
முதலில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. பாடல் காட்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தபோதும் அது கைகூடவில்லையாம்.
கார் துரத்தல் காட்சி ஒன்றைத்தான் விரிவாக காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த சண்டைக் காட்சியை காஷ்மீரில் படமாக்கத்தான் முதலில் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அங்கு படப்படிப்பின்போது ஏதாவது சிக்கல்கள் எழலாம் என்பதால் படப்பிடிப்புக் களம் ஜார்ஜியாவுக்கு மாற்றப்பட்டது.
தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக தனது தங்கும் விடுதி அறைக்குள் முடங்கி விடுவாராம் விஜய். இரண்டு முறை மட்டும் சில பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வந்திருக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அறையை விட்டு அறவே வெளியே வரவில்லை விஜய் என்கிறார்கள். முழுக்க முழுக்கத் தனிமையிலேயே இருந்தபோது நெருக்கமானவர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.
படப்பிடிப்பின்போது டிபிலிசி நகரில் படிக்கும் இந்திய மாணவர்கள் சிலர் விஜய்யைச் சந்திக்க வந்துள்ளனர். அவர்களோடு செல்ஃபி எடுத்துக்கொண்டு, சிறிது நேரம் பேசி உற்சாகப்படுத்தி அனுப்பியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக சென்னை திரும்பிய விஜய், மறுநாளே நடிகர் விவேக் வீட்டிற்குச் சென்று துக்கம் விசாரித்திருக்கிறார்.
விவேக் காலமானபோது ஜார்ஜியாவில் இருந்ததால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்று அவர் மிகவும் வருத்தம் அடைந்தாராம்.
இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அவற்றில் இடம்பெற்ற விவேக்கின் நகைச்சுவை வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விவேக் காலமான தகவலைக் கேள்விப்பட்ட நாளில், விஜய் யாருடனும் அதிகம் பேசவில்லையாம். விஜய் இரங்கல் செய்தியாவது விடுத்திருக்கலாம் என்று சிலர் குறைகூறினர். இந்நிலையில் அவர் நேரில் சென்று துக்கம் விசாரித்ததும் சர்ச்சையாகி உள்ளது. வெளிநாடு சென்று திரும்பியவர் இரு வார காலம் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்ட பிறகே வெளியே செல்லவேண்டும் என்பது விஜய்க்குத் தெரியாதா என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஒருவார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மே 3ஆம் தேதி விஜய் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
எனினும் தமிழகத்தில் கிருமித்தொற்றுப் பரவல் மோசமடைந்திருப்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதால் படப்பிடிப்புக்கு அவசரப்பட வேண்டாம் என தயாரிப்புத் தரப்பிடம் விஜய் கூறியுள்ளதாகத் தகவல்.
எனினும் இந்தாண்டு இறுதிக்குள் 'தளபதி 65' படத்தை வெளியிட வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக உள்ளாராம்.

