'சாகுந்தலம்' மூலம் புராணப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்கும் ஆசை நிறைவேறி உள்ளதாகச் சொல்கிறார் சமந்தா.
ஒவ்வொரு கதாபாத்திரம் மூலமாகவும் சில விஷயங்களைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
"ஒரு கதாநாயகியின் பாத்திரப் படைப்பை வைத்து நம்மிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதை எளிதில் எடைபோட்டுவிட முடியும்.
"நாம் எதையெல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் எத்தகைய நன்மைகளை அதனால் பெற முடியும் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
"திரையில் எத்தனையோ கதாபாத்திரங்களில் நாங்கள் நடிக்கிறோம். அதற்காக உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களும் கலைஞர்களுக்குத் தெரியும் என்று ரசிகர்கள் நினைத்தால் அது தவறு," என்கிறார் சமந்தா.
சினிமா என்பது வேறு, வாழ்க்கை என்பது வேறு என்பதை தாம் நன்கு உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சாதாரண பெண் என்ற வகையில் தமக்கும் சில எல்லைகள் இருப்பதை அறிந்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
"தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்கள் எல்லோருடனும் நடித்து விட்டேன். இப்போது தெலுங்கில் 'சாகுந்தலம்' படத்தில் நடித்து வருகிறேன். இப்படியொரு புராணப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளித்துள்ளது.
"இதுபோன்ற கதாபாத்திரங்கள் நம் வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும். அனைவரையும் போல நானும் தவறுகள் செய்வது இயல்புதான்.
"என்னை ரசிகர்களின் கோணத்தில் இருந்து பார்த்து அவ்வப்போது எடைபோட்டுக் கொள்வேன். இந்த நடைமுறை பலன் அளிக்கிறது," என்கிறார் சமந்தா.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளி யாக உள்ளது 'சாகுந்தலம்'.
கொரோனா விவகாரம் காரணமாக இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

