தமிழில் நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் 'ஹே சினாமிகா', தெலுங்கில் சர்வானந்துடன் 'மகா சமுத்திரம்' என்று ஆறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் அதிதிராவ் ஹைதரி.
அண்மையில் இவர் நடித்து வெளியான 'த கேர்ள் ஆன் த ட்ரெயின்' படத்துக்கு இணையத்தில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதையடுத்து மேலும் ஒரு படமும் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளதாகவும் அதன் வெளியீட்டு உரிமை கணிசமான தொகைக்கு விலை போயிருப்பதாகவும் உற்சாகத்துடன் சொல்கிறார் அதிதி.
ஊரடங்கின்போது வீட்டில் முடங்க நேரிட்டாலும் பல பயனுள்ள விஷயங்களில் ஈடுபட்டதாகச் சொல்கிறார். விட்டிலுள்ள பழைய மரத்தினாலான மேசை நாற்காலிகளைத் தேடிப் பிடித்து அவற்றுக்கு வர்ணம் பூசினாராம். மற்ற சில நடிகைகளைப்போல் இவரும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி உள்ளார்.
"உடலைக் கட்டுக்கோப்பகாக வைத்திருக்க எந்த அளவு மெனக்கெடுகிறேனோ அதே அளவிலான ஈடுபாட்டை உணவு விஷயத்திலும் கடைப்பிடிக்கிறேன். அதாவது நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை. பிடித்தமான உணவு வகைகளை அளவின்றிச் சாப்பிடுவேன்.
"ஹைதராபாத் பிரியாணி, கீமா, கிச்சடி ஆகியவற்றை நன்றாகச் சாப்பிடுவது மட்டுமல்ல, சமைக்கவும் தெரியும். அனைத்தையும் விட முக்கியமாக கடந்த ஊரடங்கின்போது பீட்சா செய்யக் கற்றுக்கொண்டேன்," என்று சொல்லும் அதிதி ராவுக்கு, முறைப்படி பாலே நடனம் கற்றுக்கொள்ள ஆசையாம்.
சிறு வயதில் பலமுறை இதற்குத் திட்டமிட்டபோதும் இவர் ஆசைப்பட்டது நடக்கவில்லை. ஊரடங்கின்போதும் இணையம் வழி கற்கத் திட்டமிட்டாராம். அதுவும் சாத்தியமாகவில்லை.
"இனிமேல் எப்போது வாய்ப்பும் நேரமும் கிடைக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் எப்போது ஓய்வு கிடைத்தாலும் நடன வகுப்பில் சேர்ந்துவிடுவேன். தற்போது எனக்கேற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். காரணம், இதுவரை நான் நடித்த அனைத்து மொழிப் படங்களுமே எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
"அர்ப்பணிப்புடன் கூடிய எனது நடிப்பும் உழைப்பும் இதைச் சாத்தியமாக்கி உள்ளன. கடினமாக உழைப்பது மட்டும்தான் எனக்குத் தெரிந்த ஒரே விஷயம். ஆனால், அந்த உழைப்பை அழகாக செதுக்கி என் நடிப்பை மெருகேற்றுவது இயக்குநர்கள்தான்.
"இப்படி எல்லாமே எனக்கு நல்லவிதமாக அமைய கடவுளின் அருள்தான் ஒட்டுமொத்தக் காரணம் எனக் கருதுகிறேன். கடவுள் அருள்தான் நல்ல கதாபாத்திரங்களையும் இயக்குநர்களையும் என்னை நோக்கி வரவைக்கின்றன," என்கிறார் அதிதி.
குடும்பப்பாங்கான பெண்ணாக மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் இவர் அசத்துகிறார். அதேசமயம் இந்தக் கவர்ச்சி விவகாரம் இவரை விமர்சனத்துக்கும் ஆட்பட வைத்துள்ளது.
"கவர்ச்சியாக நடிப்பது ஒன்றும் கெட்ட விஷயம் அல்ல. கவர்ச்சியையும் நான் மிகவும் நேசிக்கிறேன். அது அற்புதமான விஷயம். எல்லோராலும் கவர்ச்சியாக நடிக்கமுடியாது," என்கிறார் அதிதி ராவ்.
இவரைக் காதலிப்பதாக பலர் சொல்லி இருக்கிறார்களாம். ஆனால், தமக்கு இதுவரை யார் மீதும் காதல் ஏற்பட்டதில்லை என்கிறார்.
"நிறைய ரசிகர்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தும்போது நாசூக்காக ஒதுக்கிவிடுவேன். ஒருமுறை துருக்கி சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு ரசிகர், "நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்' என்று கேட்டார். இந்தியாவிலிருந்து வந்திருப்பதாக சொன்னேன். உடனே என்னைப் பார்த்து காதலுடன் சிரித்தவர், 'சொர்க்கத்தில் இருந்து வந்திருக்கிறீர்களோ என்று நினைத்தேன்' என்றார்.
"இப்படி பல காதல் வசனங்களையும் கேட்டிருக்கிறேன். இதுவரை நான் யாரையும் காதலித்ததில்லை என்பதுதான் உண்மை. காதல் என்பது அற்புதமான உணர்வு. அதை மறைக்கவேண்டிய அவசியமில்லை.
"இதுவரை நான் அதிகம் நேசித்த விஷயம் என்றால் அது பயணம் மேற்கொள்வதுதான். அனைத்து நாடுகளுக்கும் செல்லவேண்டும் எனும் ஆசை உண்டு. எனக்கு மிகவும் பிடித்தமான இடம் லண்டன். அங்குள்ள ஒவ்வொரு தெருவும் எனக்கு அத்துப்படி," என்கிறார் அதிதி ராவ்.

