"திருமணமாகி நான்காண்டுகள் ஆகிவிட்டன. இன்றளவும் எனக்கான வாய்ப்புகள் தேடி வருகின்றன. நல்ல கதாபாத்திரங்கள், நல்ல படக்குழு, நல்ல ஊதியம் என எனது திரையுலகப் பயணம் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது," என்று உற்சாகமாகப் பேசுகிறார் பிரியாமணி.
தற்போது கைவசம் ஆறு புதிய படங்கள், இரண்டு இணையத் தொடர்கள் என்று இந்தப் பெருந்தொற்று காலத்திலும் பரபரப்பாக வலம்வரும் நாயகி இவர்தான்.
"நான் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவள். இருப்பினும் தமிழ்ப்பெண்ணான எனது பூர்வீகம் கேரளா. நன்றாகத் தெலுங்கு பேசுவேன். தற்போது மும்பையில் வசித்து வருகிறேன்.
"தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஆறு மொழிகளில் என்னால் சரளமாகப் பேசமுடியும். அந்த மொழிகளில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க நான் தயார். அதற்கான வாய்ப்புகள் கிடைக்குமென நம்புகிறேன்," என்கிறார் பிரியா.
இப்போது இவரை இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக 'அசுரன்' மறுபதிப்பிலும் ராணா டகுபதியுடன் 'விராட பருவம்' படத்திலும் நடித்து வருகிறார் பிரியா.
இந்தியில் இவர் நடித்த 'மைதான்' மிக விரைவில் வெளியீடு காண உள்ளது. 'த ஃபேமிலி மேன்' இணையத் தொடரின் இரண்டாம் பாகத்திலும் 'ஹிஸ் ஸ்டோரி' என்ற இணையத்தொடரிலும் நடித்துள்ளார்.
"திரைப்படங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் என்னால் பங்கேற்க முடிகிறது. நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளேன். அனைத்துக்கும் எனக்கு நேரம் கிடைப்பது எனக்கே ஆச்சரியமாக உள்ளது.
"30 வயதைக் கடந்துவிட்ட நிலையில் மனநிறைவு தரும் கலையுலக வாய்ப்புகளுக்கு மத்தியில் மும்பைக்கும் துபாய்க்கும் இடையே இடைவிடாமல் பறந்து கொண்டிருக்கிறேன். கொரோனா இரண்டாம் அலை பலரது வாழ்க்கையில் விளையாடி வருகிறது. ஆனால், என்னால் அனைத்துப் பணிகளையும் தடையின்றி செய்ய முடிகிறது.
"உண்மையில் மிகப்பெரிய புதிர் கட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் தன்னால் உரிய இடங்களில் விழுந்துவிட்டது போல் உணர்கி றேன். எனது திருமண, திரை யுலகப் பயணமும் வளர்ச்சியும் சீராக உள்ளன," என்கிறார் பிரியாமணி.
இணையத் தொடர்களில் நடிப்பது ஓரளவு வசதியாக உள்ளது என்று குறிப்பிடுபவர், அவற்றின் படப்பிடிப்பும் வேகமாக நடப்பதாகச் சொல்கிறார்.
"படப்பிடிப்பின்போதே பல பட வேலைகளைக் கச்சிதமாக முடித்து விடுகிறார்கள். ஒரே சமயத்தில் இரண்டு கேமராக்கள் வைத்து காட்சிகள் படமாக்கப்படுகின்றன. ஒரேநாளில் ஆறு காட்சிகள் வரை படமாக்கப்படுகின்றன.
"பிறகு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவது போல் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கிளம்பிவிடலாம்," என்று சொல்லும் பிரியாமணி, இந்தாண்டு கோடை விடுமுறைக்கு எங்கும் செல்ல முடியவில்லை என்று வருந்துகிறார்.
திருமணத்துக்குப் பிறகு கணவருடன் காதலுடன் கூடிய ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளாராம்.
"இருவருமே எங்களது தொழிலில் பரபரப்பாக இருக்கிறோம்.
"ஆனால், எங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் கோடைக்காலத்திலும் புத்தாண்டு வேளையிலும் விடுமுறையில் எங்காவது செல்லவேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். ஆனால், தொற்றுப்பரவல் இடையூறாக இருக்கிறது," என்று ஏக்கத்துடன் சொல்கிறார் பிரியாமணி.

