திரையுலகத்தினர் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்தப் பட்டியலில் நடிகைகள் சுனைனா, கேப்ரியலா உள்ளிட்டோர் சேர்ந்துள்ளனர்.
அலட்சியமாக இருந்தால் கிருமித்தொற்று ஏற்படும் என்பதை உணர்ந்து தாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகச் சொல்கிறார் சுனைனா. ஆனால், அதையும் மீறி அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
"நிபுணர்கள் கூறிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். அதையும் மீறி பாதிக்கப்பட்டுள்ளேன். இனி அதிலிருந்து மீள்வது குறித்து யோசிக்க வேண்டும்.
"கொரோனா வழிகாட்டி விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனது வீட்டாரும் தனிமையில் உள்ளனர்.
"அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்," என்று கூறியுள்ளார் சுனைனா.
இதற்கிடையே 'பிக்பாஸ்' புகழ் கேப்ரியலாவும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்கான சில அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்துகொண்டாராம் கேப்ரியலா. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் சிகிச்சையை அடுத்து மீண்டு வருவதாகத் தகவல். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக கேப்ரியலாவுடன் நடனமாடிய பாடகர் ஆஜித்துக்கும் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பில் பங்கேற்க சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பங்கேற்க இருந்த தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இதேபோல் படக்குழுவினரின் பாதுகாப்பைக் கருதி 'தளபதி 65' படப்பிடிப்பை இப்போதைக்குத் தொடங்க வேண்டாம் என நடிகர் விஜய்யும் கூறிவிட்டாராம்.
ஜார்ஜியாவில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்த 'தளபதி 65' படக்குழுவினர் அடுத்தகட்டமாக சென்னையில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பை நடத்த முடிவானது.
இந்நிலையில் இயக்குநர்கள் கே.வி. ஆனந்த், தாமிரா, நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, துணை நடிகர்கள் என அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பலியாகினர். இதனால் படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என விஜய் கேட்டுக்கொண்டதாகத் தகவல்.

