கொரோனா கிருமித்தொற்று ஏற்படும்போது அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடாது என்கிறார் நடிகை ஆண்ட்ரியா.
அதுபோன்ற தருணங்களில் மனநல ஆலோசனை பெறுவது மிக அவசியம் என்று அண்மைய சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்ட்ரியாவுக்கும் கிருமித்தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்ட அவர், சிகிச்சைக்குப் பின் நலமடைந்துள்ளார்.
அவரது தனிமைப்படுத்தல் படலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் பதிவை வெளியிட்டிருப்பதாக கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிகுறிகள் மூலம் உணர்ந்தால் உடனடியாக அரசாங்கத்தின் உதவியை நாட வேண்டும் என்று அந்தப் பதிவில் வலியுறுத்தி உள்ளார். மேலும், தமது அனுபவத்தைக் கொண்டு ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பத்து ஆலோசனைகளை வழங்கி உள்ளார் ஆண்ட்ரியா.
கொரோனா கிருமித்தொற்று என்பது உலகளவிலான ஒரு தொற்று நோய் என்றும் இந்த நோய்த் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
"நமக்கோ அல்லது அருகில் இருப்பவர்களுக்கோ தொற்று ஏற்படும்போது அது தொடர்பான குற்ற விசாரணைகள் தேவையில்லை. உங்களைச் சார்ந்தவர்களிடம் கருணையோடு இருங்கள்.
"அறிகுறிகள் தென்பட்டபின் காலதாமதம் கூடாது. அறிகுறிகள் தீவிரமானாலோ உயிர்வாயுவின் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.
"மருத்துவ உதவி கிடைக்கும்வரை உயிர் வாயு அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது முக்கியம். இதற்கு குப்புறப்படுத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகள் உதவும்," என்கிறார் ஆண்ட்ரியா.
ஒவ்வொருவரும் தங்களுடைய குடும்பத்தினர் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்று நினைப்பது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், வீட்டுப் பணியாளர்கள் பாதுகாவலர்கள் என்று தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்று அறிவுறுத்தி உள்ளார்.
"தனிமையில் இருக்கும்போது அதிகம் உணர்ச்சி வசப்படுவோம். எனவே மனநல ஆலோசனை நிச்சயம் தேவை. கொரோனா விவகாரம் தொடர்பான எதிர்மறை செய்திகள், புள்ளிவிவரங்கள் தினமும் வெளிவந்தபடிதான் இருக்கும். அவற்றிலிருந்து மொத்தமாக விலகி இருப்பது நல்லது.
"மன அழுத்தம் என்பது ஒருவரது நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்துவிடும். புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது, நண்பர்கள், நல்லவர்களுடன் உரையாடுவது போன்ற நடவடிக்கைகள் மன அழுத்தத்தை மறையச் செய்யும்.
"உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகள், உணவுகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். சில மூலிகைகளும் கைகொடுக்கும். எனினும் இவை அனைத்தும் துணை மருத்துவம்தான். கொரோனா தொற்றுக்கு உரிய மருத்துவரைக் கலந்தாலோசித்து தேவையான மருந்துகளை உட்கொள்வதும் மிக அவசியம்," என்கிறார் ஆண்ட்ரியா.
தம்மை தனிமைப்படுத்திக்கொண்டபோது தன் வீட்டு பால்கனியிலும் மொட்டை மாடியிலும் தினமும் சிறிது நேரத்தைச் செலவிடுவாராம். சுத்தமான காற்றை சுவாசிப்பது மன ஆறுதலுக்கு உதவும் என்கிறார்.
தொற்றுக் காலத்தில் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை என்பதும் இவரது அறிவுரைகளில் ஒன்று. மிளகு ரசம், இஞ்சித் தேநீர், மஞ்சள் கலந்த பால், சூப் வகைகளை அருந்தலாம் என்கிறார். சளி பிடிக்கக்கூடிய உணவுகளை மொத்தமாக தவிர்க்கும் அதேநேரத்தில் அடிக்கடி தண்ணீர், பழரசங்கள் என நீராகாரங்களை உட்கொள்வது நல்லது என கிட்டத்தட்ட தேர்ந்த மருத்துவரைப் போலவே பேசுகிறார் ஆண்ட்ரியா.
தொற்று உறுதி செய்யப்பட்டால் பயத்தை ஏற்படுத்தும். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம்கொடுக்கக்கூடாதாம். அத்தகைய சிந்தனைப் போக்கு நிலைமையை மோசமாக்கிவிடும் என்கிறார்.
"நோயில் இருந்து மீள்வதில் மட்டுமே கவனம் இருக்கவேண்டும். இந்தக் கிருமித்தொற்று மூக்கு, தொண்டை, இறுதியாக நுரையீரல் என சுவாசப் பாதையைத்தான் தாக்குகிறது. எனவே, சுவாசப் பாதையை தொற்றிலிருந்து காக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதை மருத்துவரின் ஆலோச னைப்படிச் செய்யுங்கள்," என்கிறார் ஆண்ட்ரியா.

