"நான் சினிமா துறைக்கு வந்தது ஒரு விபத்து என்று சொல்லாத நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் எனக்கு வேறு வழியில்லை. ஏன் நடிப்புத்துறைக்கு வந்தீர்கள் என்ற கேள்விக்கு அந்தப் பதில்தான் பொருத்தமாக இருக்கும்," என்று சொல்லிச் சிரிக்கிறார் இளம் நாயகி அதுல்யா ரவி.
கோயம்புத்தூரைச் சேர்ந்த இவரது நடிப்பில் அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளியீடு காண உள்ளன.
சினிமா மீது தமக்கு துளிகூட ஆர்வம் இருந்ததில்லை என்றும் நடிப்பது குறித்து தாம் யோசித்ததே இல்லை என்றும் கூறுகிறார். எல்லோரையும் போல் சினிமா ரசிகையாக மட்டுமே இருந்ததாகச் சொல்கிறார்.
பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவர்கள் எடுத்த குறும்படம் ஒன்றில் அதுல்யாவை நாயகியாக நடிக்கக் கேட்டுள்ளனர். வீட்டில் அனுமதித்தால் நடிக்கிறேன் என்றாராம்.
ஆனால் பெற்றோரோ இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லி, நடிக்க முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் விடவில்லை.
மொத்தமாக கிளம்பிவந்து அதுல்யாவின் பெற்றோரிடம் கெஞ்சாத குறையாக அனுமதி கேட்டு எப்படியோ அவரை நடிக்க வைத்துள்ளனர்.
"அதன்பிறகுதான் பெரிய கூத்து நடந்தேறியது. குறும்படம் என்று நாங்கள் நினைத்தது எங்களையும் மீறி வளர்ந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பை நடத்தினோம். நான்காண்டுகள் பொறியியல் படித்துக்கொண்டே படப்பிடிப்பை நடத்தியதில் இரண்டு மணி நேரத்துக்கும் குறையாத முழுநீளத் திரைப்படமே தயாராகிவிட்டது.
"அதை 'மதுபானக் கடை' பட இயக்குநர் கமலக்கண்ணன் பார்த்தார். பிறகு படத்தை வெளியிடவும் உதவி செய்தார். அதுதான் தமிழில் நான் அறிமுகமான 'காதல் கண் கட்டுதே' படம்.
"முழுக்க கோவையில் கல்லூரி மாணவர்களால் உருவான படம். இப்போது சொல்லுங்கள் நான் நடிக்க வந்தது விபத்துதானே" என்று அதுல்யாவிடமிருந்து கேள்வி எழுகிறது.
இதையடுத்து வி.இசட். துரையின் 'ஏமாளி', அன்பழகனின் 'அடுத்த சாட்டை', சமுத்திரகனியின் 'நாடோடிகள்-2' என்று அடுத்தடுத்து முக்கிய இயக்குநர்களின் இயக்கத்தில் ஆறு படங்களில் நடித்துள்ளார். இப்போது 'வட்டம்', 'முருங்கக்காய் சிப்ஸ்' என நான்கு படங்கள் இவரது நடிப்பில் வெளியீடு காண உள்ளன.
இவரது பாட்டனார் கோவையில் பெயர் பெற்ற மாட்டுவியாபாரியாம். தோட்டம், விவசாயம் என பசுமையான சூழ்நிலையில் வளர்ந்துள்ளார். தென்னை, மா, பலா, வாழை, கரும்பு என தமது தோட்டத்தில் எங்கு திரும்பினாலும் பசுமை குளிர்விக்கும் என்று உற்சாகத்துடன் சொல்பவர், தாம் நடிக்க வந்தபோது இருந்ததைவிட தமிழ் சினிமா சூழ்நிலை இப்போது முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சொல்கிறார்.
"பிற மொழி நாயகிகளுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஆனால், தமிழ்ப் பெண்களால்தான் தாய்மொழியான தமிழில் சரளமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசமுடியும். இதைப் பெரிய தகுதியாகக் கருதுகிறேன்.
"இந்த ஒரு காரணத்துக்காக மட்டுமாவது தமிழ்ப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். கதை நடைபெறும் ஊரின் சாயலுக்கு அதிக முக்கியத்துவம் தரும் இயக்குநர்கள் இப்போது அதிகரித்துள்ளனர் என்பது நல்ல விஷயம்.
"'அடுத்த சாட்டை' படத்தில் இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியில் சமுத்திரகனி சார் மூன்று நிமிடங்கள் போல் வசனம் பேசுவதாக இருந்தது. ஆனால், தாம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் நன்றாக இருக்காது, கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என்று அவர் இயக்குநரிடம் கூறினார்.
"இதையடுத்து படப்பிடிப்பின்போது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் பெரிய வசனத்தைப் பேசி நடிக்குமாறு இயக்குநர் கூறினார். நான் சளைக்கவில்லை. அந்தக் காட்சியில் ஒரே டேக்கில் வசனத்தைப் பேசிமுடித்தேன். அந்தக் காட்சிக்குத் திரையரங்குகளில் பலத்த கைத்தட்டல் கிடைத்தது.
"தமிழ்ப் பெண்ணாக இருந்ததால்தான் இது சாத்தியமானது. இதற்காக சமுத்திரகனி சாருக்கும் இயக்குநர் அன்பழகனுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்," என்கிறார் அதுல்யா ரவி.
தற்போது அமலாபால் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறாராம். மிக விறுவிறுப்பான கதையம்சம் கொண்ட அந்தப் படம் ரசிகர்களுக்குப் பல உண்மைகளை எடுத்துச் சொல்லும் என்கிறார்.