பாண்டிராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பாக வளர்ந்து வருகிறது சூர்யாவின் 40வது படம்.
வழக்கமாக கிராமத்துக் கதைக் களத்தில்தான் படம் எடுக்க விரும்புவார் பாண்டிராஜ். சூர்யாவும் அதுபோன்ற ஒரு கதையைத்தான் எதிர்பார்த்தாராம்.
ஆனால், கிராமமும் நகரமும் இணைந்த மிரட்டலான கதையை பாண்டிராஜ் விவரித்தபோது அசந்துபோனாராம் சூர்யா.
'கடைக்குட்டி சிங்கம்' படத்தைத் தயாரித்தபோதே அதன் இயக்குநர் பாண்டிராஜுக்கு முன்பணமாக ஒரு தொகையைக் கொடுத்து தனக்கு ஒரு கதையை உருவாக்க சொல்லியுள்ளார் சூர்யா. அதற்கான பணிகளில் பாண்டிராஜ் ஈடுபட்டிருந்தபோதுதான் முன்னணி நிறுவனமான சன் பிக்சர்ஸ் சூர்யாவை அணுகியிருக்கிறது.
உடனே பாண்டிராஜ் பெயரை சூர்யா பரிந்துரைக்க, மூவர் கூட்டணியில் 'சூர்யா 40' உருவாகி வருகிறது. முழுக்க கிராமத்துப் பின்னணி கொண்ட படம் என்ற தமது பாதையிலிருந்து இந்தப் படத்துக்காக விலகி வந்திருக்கிறார் பாண்டிராஜ்.
பொள்ளாச்சி பகுதிகளில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளுக்குப் பழிவாங்கும் இளைஞனின் கதை என்று தொடக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால், அந்தச் சம்பவத்துக்கும் இந்தப் படத்துக்கும் துளிகூட தொடர்பில்லை.
அதேசமயம் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் காட்சிகள் இருப்பதாக 'சூர்யா 40' படக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.
இந்தப் படத்துக்கு முதலில் வேல்ராஜ்தான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தார். ஆனால், அவர் வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இதுவும் சூர்யா நாயகனாக நடிக்கும் படம்தான். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்பதால் வேல்ராஜ் 'சூர்யா 40'ல் ஒப்பந்தமாகவில்லை.
அவருக்குப் பதிலாக ரத்னவேலு இணைந்துள்ளார். பாண்டிராஜ்-ரத்னவேலு கூட்டணியில் படமாக்கப்படும் ஒவ்வொரு காட்சியும் அசத்தல் ரகம் என்று படக்குழுவினர் இப்போதே மெச்சிக் கொள்கிறார்கள்.
சூர்யாவுக்கு இதில் இரட்டை வேடம் என்பது தவறான தகவலாம். பரபரப்புக்காக யாரோ கிளப்பிவிட்ட வதந்தி இது என்றும் படத்தில் ஒரே ஒரு சூர்யாதான் என்றும் இயக்குநர் தரப்பு கூறுகிறது. தங்கைக்காகப் போராடும் அண்ணன், காதலிக்காக உருகும் காதலன் என ஒரு சூர்யாதான் இரண்டுவிதமாக வலம் வருவாராம்.
படத்தின் நாயகி பிரியங்கா மோகன் தற்போது சிவகார்த்திகேயனுடன் 'டாக்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சிவா நடிப்பில் உருவாகும் 'டான்' படத்திலும் இவர்தான் நாயகி. சிவாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமானது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், 'சூர்யா 40' படத்திலும் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது சன் பிக்சர்ஸ்.
வேட்டி சட்டையில் கையில் வாளுடன் சூர்யா நடந்து செல்வது போன்று முதல் தோற்றச் சுவரொட்டியை படக்குழு வெளியிட சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர். சூர்யா நடிப்பில் வித்தியாசமான அடிதடி படமாக இது உருவாகும் எனும் நம்பிக்கை இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
படத்தின் தலைப்பை பாண்டிராஜ் எப்போதோ முடிவு செய்துவிட்டாராம். ஆனால், அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் தலைப்பை மாற்றுவது குறித்து பாண்டிராஜ் தரப்பு யோசித்து வருகிறது.
படப்பிடிப்பின்போது பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முதற்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ஒரு கிராமத்தில் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்ட ஊர்ப் பெண்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வந்து கொண்டாடுவது போன்று ஒரு பாடல் காட்சியைப் படமாக்கி உள்ளனர்.
இதற்காக ஒரு திருவிழாக் கொண்டாட்டத்திற்கே ஏற்பாடு செய்திருக்கிறார் பாண்டிராஜ். இந்த ஏற்பாடுகளைப் பார்த்து வியப்படைந்த சூர்யா, 'இதுபோன்ற சம்பிரதாயம் இருப்பதை நான் கேள்விப்பட்டதே இல்லை. இது அருமையான ஏற்பாடு' என்று பாராட்டி உள்ளார்.
, :
சூர்யா

