முறையான உணவுப் பழக்கமும் உடற்பயிற்சியும் இருந்தாலே போதும் நலமாக இருக்கலாம் என்கிறார் இளம் நடிகை நிவேதிதா சதீஷ்.
'சில்லுக்கருப்பட்டி' படத்தில் நடித்துள்ள இவர், மனித வாழ்க்கைக்கு நெருக்கடி ஏற்படும்போது மட்டும் நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது மட்டும் போதுமானதல்ல என்கிறார்.
"நடிப்பும் நடனமும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள். அவற்றை அடுத்து என்ன பிடிக்கும் என்று கேட்டால் சாப்பிடுவதுதான் என்பேன். நான் ஒரு சாப்பாட்டுப் பிரியை," என்று சொல்லிச் சிரிக்கிறார் நிவேதிதா.
எதை, எவ்வளவு சாப்பிட்டால் நல்லது என்பதெல்லாம் தமக்கு அத்துப்படி என்று சொல்லும் நிவேதிதா, தாம் பின்பற்றும் உணவுமுறைக்குத் தனது தாயார்தான் காரணம் என்கிறார். நிவேதிதாவின் தாய் ஊட்டச்சத்து நிபுணராம். அதனால் சிறுவயது முதலே முறையான உணவுப்பழக்கம் குறித்து, மகளுக்கு நிறைய விவரங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
"எவையெல்லாம் சத்தான உணவுகள் என்று எனக்கு யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. எவையெல்லாம் உடல்நலத்துக்குப் பிரச்சினை ஏற்படுத்துமோ அவற்றையெல்லாம் நான் இயல்பாகவே தவிர்த்துவிடுவேன். காஃபி, தேநீர் இரண்டுமே எனக்குப் பிடிக்காது. குளிர்பானங்கள் எதையும் அருந்துவதில்லை.
"சிறுவயது முதலே நான் இப்படித்தான். அதனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வளரும் வகையில் சாப்பிட வேண்டும் எனும் கட்டாயம் எனக்கு ஏற்படவில்லை. காரணம் நான் ஏற்கெனவே நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன்தான் இருக்கிறேன்," என்கிறார் நிவேதிதா.
ஒருவேளை தம்மை கொரோனா கிருமி தொற்றியிருந்தாலும் அதற்கான அறிகுறிகள் தென்படாது என்றும் அந்தக் கிருமி தம் உடலில் செயலற்றுப் போயிருக்கும் என்றும் சொல்கிறார்.
நிவேதிதாவுக்கு தமிழில் இன்னும் பெரிய படங்கள் அமையவில்லை. தற்காப்புக் கலைகளை முறையாக கற்றுத் தேர்ந்துள்ளார். கராத்தேவில் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளாராம். நடனத்தின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர். கதக் நடனத்தை முறைப்படி கற்றுள்ளார். உடற்பயிற்சிக் கூடத்துக்குத் தினமும் செல்வது, பல மணிநேரம் உடற்பயிற்சி செய்வது எல்லாம் தமக்கு ஒத்துவராது என்பவர், தினமும் யோகாசனம் செய்ய தவறுவதில்லை.
"இதன்மூலம் என்னால் சுறுசுறுப்பாகவும் வயதுக்கு மீறிய உற்சாகத்துடனும் செயல்பட முடிகிறது. உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும். இது இதயத்தையும் நுரையீரல்களையும் நன்கு இயங்க வைக்கும் என்கிறார்," நிவேதிதா.
தற்போது நாம் உட்கொள்ளும் உணவானது கடந்த காலத்தைப் போன்று தரமானதாக, நமக்கு முழுமையாக நலம் தரக்கூடியதாக இல்லை என்று இவரது தாயார் அடிக்கடி கூறுவாராம்.
"நான் தெலுங்குப் பெண் என்றாலும் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். ரசமும் இட்லியும் இல்லாமல் என்னால் வாழவே முடியாது. ஒருசில உணவுக்கு நமது உடல் பழக்கப்பட்டிருக்கும். திடீரென அதில் மாற்றம் செய்தால் உடலின் உள்கட்டமைப்பில் குழப்பம் ஏற்படும். மருத்துவர் சொல்லாமல் மாற்றங்களைச் செய்ய வேண்டாம்," என்கிறார் நிவேதிதா.

