திரைப்படங்கள் மட்டுமல்ல, இணையத் தொடர்களும்கூட தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சமந்தா நடித்துள்ள 'தி ஃபேமிலி மேன் 2' தொடருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜூன் 4ஆம் தேதி இணையத்தில் வெளியாகிறது இந்தத் தொடர். இந்நிலையில் இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் 'நாம் தமிழர் கட்சியின்' சீமான் உள்ளிட்ட தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் இத்தொடரை வெளியிடக்கூடாது என எதிர்ப்புக் குரல் எழுப்பி உள்ளனர்.
இந்தத் தொடரில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று சென்னையில் குண்டுவெடிப்புக்குத் திட்டமிடுவதாகவும் அதை இந்திய உளவுப் பிரிவில் பணியாற்றும் வடஇந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து முறியடிப்பதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளதாம்.
சமந்தா இலங்கையைச் சேர்ந்த பெண் தீவிரவாதியாக நடித்துள்ளார். இதுதான் தமிழ்த் தேசிய ஆதரவாளர்களைச் சீண்டியுள்ளது.
"இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகளாகக் காட்டுவதுதான் இதன் நோக்கம். இலங்கையில் ஏராளமான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதுகுறித்து இந்தத் தொடரில் காட்சிப்படுத்தி உள்ளனரா என்று தெரியவில்லை. எனவே, இந்தத் தொடரை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்," என்கிறார் சீமான். இதேபோல் மேலும் சில அமைப்புகள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. எனினும், படக்குழுத் தரப்பில் இதுவரை எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், தொடரின் முதல் பகுதிகூட வெளிவராத நிலையில் அதைக் கடுமையாக விமர்சிப்
பதும் தடை செய்யவேண்டும் எனக் கூறுவதும் அவசியமில்லை என்ற வாதமும் கிளம்பி உள்ளது.
நடிகை சமந்தா இந்த எதிர்ப்பு குறித்து மறைமுகமாகக் கருத்து தெரிவித்துள்ளார். "அமைதியாக இருங்கள். நம்பிக்கையாக இருங்கள்" என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'முழு;g பாதையும் தென்படாவிட்டாலும் நம்பிக்கையே முக்கியம்' என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியையும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

