விக்ரமுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை என்கிறார் மிருணாளினி.
ஒரு நடிகையாக அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும் எனும் ஆசை மனதில் அதிகரித்திருப்பதாக அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
'டிக்டாக்' செயலியில் வெளியிட்ட காணொளிப் பதிவுகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் மிருணாளினி. தற்போது விக்ரமுடன் 'கோப்ரா' படத்தில் இணைந்துள்ளார்.
மேலும், எம்ஜிஆர் மகன்', 'எனிமி' உள்ளிட்ட படங்களிலும் இவரைக் காணமுடியும்.
"விக்ரம் சாரைப் பொறுத்தவரை மிக அழகான, மிடுக்கான நாயகன். நான் அவருடைய தீவிர ரசிகை. 'அந்நியன்', 'சாமி' உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு அபாரமாக இருக்கும்.
"அவர் நடித்த படங்களை ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட நடிகருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும்போது அவர் நடித்த படங்களின் பாடல்களைக் காட்டும்போது உற்சாகமாகிவிடுவேன்.
"இப்போது அவருடன் சேர்ந்து நானும் திரையில் தோன்றப் போகிறேன் என்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது," என்று சொல்லும் மிருணாளினி, விஷால் நாயகனாக நடிக்கும் 'எனிமி' படம் குறித்து இப்போது எந்தத் தகவலையும் பகிர இயலாது என்கிறார்.
சரியான நேரத்தில் அந்தப் படம் குறித்த விவரங்களை இயக்குநரின் அனுமதியோடு வெளியிடுவாராம். அதுவரை வாய் திறக்கக்கூடாது என தமக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தகவல்.
"ஒரு நடிகை அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும். நான் அதற்கு இரு மடங்கு தயாராக உள்ளேன்.
"கஜினி' படத்தில் அசின் நடித்த கல்பனா கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமானது. மிக இயல்பான துறுதுறு குணாதிசயம் கொண்ட இளம்பெண்ணாக நடிப்பில் அசத்தி இருப்பார். அப்படிப்பட்ட வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்.
"அதேபோல் 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் ஜெனிலாவைப் பார்த்தவுடனேயே பிடித்துப் போகும். 'சம்திங் சம்திங்' படத்தில் திரிஷா அமைதியாக இருந்து முகபாவங்களிலும் கண்ணசைவிலும் மட்டுமே மனதைக் கொள்ளை கொள்வார்.
"இப்படிப்பட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் மிருணாளினி.
சசிகுமாருடன் 'எம்ஜிஆர் மகன்' படத்தில் நடித்தபோது சத்யராஜ், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன் என்று அனுபவக் கலைஞர்களுடன் பேசிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததை வாழ்நாள் அதிர்ஷ்டமாகக் கருதுகிறாராம்.
தேனி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள் நடந்ததாம். அப்போது அனைவரும் ஒரே குடும்பம் போல் பாசத்துடன் பழகியதாகச் சொல்கிறார். கிராமங்கள் மனதை கொள்ளை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மிருணாளினி

