வீட்டுக்குள் முடங்கிய திரிஷா
வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த போதிலும் சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் திரிஷாவைக் கவலைப்பட வைத்துள்ளது.
இதனால் புதுப் படங்களுக் காக கதை கேட்பதை சில நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளாராம். தற்போது 'கர்ஜனை', 'ராங்கி', 'சுகர்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா. சில படங்களின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் தமக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தி சில இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டு வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக கதை கேட்பதைத் திடீரென நிறுத்தி விட்டாராம்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டு, தொற்றுப் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டதாக தமிழக அரசு அறிவித்த பிறகே திரையுலகப் பணிகளை மீண்டும் தொடங்குவது என திரிஷா திட்டவட்ட முடிவில் இருப்பதாகத் தகவல்.
விலங்குகளுக்கு உதவும் ஆரவ்
ஊரடங்கின்போது தெருக்களில் சுற்றித் திரியும் பூனை, நாய், மாடுகளுக்கு உணவளிக்கும் நல்ல காரியத்தில் ஈடுபட்டுள்ளார் 'பிக்பாஸ்' புகழ் ஆரவ்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஊரடங் கால் சாலையில் சுற்றித் திரியும் நாய்களையும் மாடுகளையும் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
"ஆதரவற்ற பிராணிகளுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உதவுவது நம் கடமை. உணவின்றி அவை பரிதவிக்கின்றன. நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்," என்கிறார் ஆரவ். மேலும் தாம் தெரு நாய்களைத் தேடிச் சென்று உணவளிக்கும் காணொளிப் பதிவு ஒன்றையும் அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

