கொரோனா நெருக்கடி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் தயாரிப்புப் பணிகளும் முடங்கி உள்ளன.
இந்நிலையில் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்கள், பெரிய தயாரிப்புகள் என பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முடக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்து தயாரிப்பாளர்கள் மத்தியில் முணுமுணுப்பும் புலம்பல்களும் அதிகரித்துள்ளன.
ரஜினிகாந்த் நடிக்கும் 'அண்ணாத்த' படத்தின் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கி விட்டனர். இன்னும் நான்கைந்து நாள் படப்பிடிப்பு நடத்தினால் போதுமாம். மொத்த படமும் முடிந்துவிடும்.
அதேபோல் விஜய் நடிக்கும் 'தளபதி 65', அஜித்குமாரின் 'வலிமை' ஆகியவற்றின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 'வலிமை'க்கும் ஒரு வார படப்பிடிப்பு நடந்தால் போதும்.
விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் படங்கள் திரையீடு காணத் தயாராக உள்ளன. ஆனால் ஒவ்வொரு படத்தின் வெளியீடும் குறிப்பிட்ட சில காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வகையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முடங்கி இருப்பது தயாரிப்பாளர்களைக் கவலை அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே தயாரிப்பாளர்கள் குறிப்பாக குறைந்த செலவில் படம் எடுப்பவர்கள் வேறொரு பிரச்சினையை முன்வைக்கின்றனர்.
"நாங்கள் சிரமப்பட்டு தயாரிக்கும் படங்களைத் திரையிட பெரும்பாலான திரையரங்குகள் அவ்வளவு எளிதில் முன்வருவதில்லை. மேலும் நேரடியாக இணையத்தில் வெளியிடலாம் என்றால் அதுவும் குதிரைக்கொம்பாக இருக்கிறது," என்பது இந்தத் தயாரிப்பாளர்களின் புலம்பலாக உள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதம் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மீண்டும் ஏப்ரல் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பு 60 சிறிய பட்ஜெட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தன.
"நான்கு மாதங்களுக்குள் இத்தனை படங்களை வெளியிட்டால் திரையரங்குகள் கிடைப்பது கடினம்தான். மேலும் 'மாஸ்டர்', 'ஈஸ்வரன்' உள்ளிட்ட சில பெரிய படங்களும் வெளியாகின. வழக்கம்போல் சிறிய படங்கள் வந்த வேகத்தில் திரையரங்கை விட்டு ஓடிவிட்டன.
"பெரும்பாலான படங்களுக்கு ஒரு நாளில் ஒரு காட்சி மட்டுமே திரையரங்குகளால் ஒதுக்கப்பட்டன. எனவே, இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறது என்பதே ரசிகர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது," என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
அதுமட்டுமல்ல, இவ்வாறு குறைந்த செலவில் எடுக்கப்பட்ட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியீடு காண வழியின்றி முடங்கி இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.
இன்றைய காலகட்டம் குறைந்த செலவில் படங்கள் தயாரிக்க சாதகமாக இல்லை என்கிறார் தயாரிப்பாளர் சி.வி. குமார். 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்து அதிக வெற்றிகளையும் வசூலையும் ஈட்டிய தயாரிப்பாளர் இவர்.
"தொழில்நுட்பங்கள் வளர்ந்திருப்பதுடன் எளிதாகவும் உள்ளன. அதனால், குறைந்த செலவில் படமெடுப்பது சாத்தியமாகிறது. ஆனால் நல்ல கதைக்கரு, கதைக்களத்து டன் உருவாகும் படங்கள்தான் ரசிகர்களைப் படம் பார்க்கத் தூண்டுகிறது.
"தரமான உள்ளடக்கம் இருந்தால் மட்டுமே இணைய நிறுவனங்களும் படங்களை வாங்குகிறார்கள். அதேசமயம் நல்ல படங்களையும்கூட இணையத்தில் செலவின்றி பார்த்துக் கொள்ளலாம் என்று ஒருதரப்பு ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.
"அதனால் சுற்றிலும் பல சவால்கள் காத்திருக்கின்றன. நல்ல உள்ளடக்கம் இல்லையென்றால் திரைப்படங்களுக்காக வைக்கப்படும் பதாகைகளுக்கு செலவிட்ட காசு கூட திரும்பக் கிடைக்காது," என்கிறார் சி.வி. குமார்.
அப்படி இருந்தும் பலர் குறைந்த செலவில் படம் தயாரிப்பது ஏன் என்று கேட்டால், திரையுலகம் ஒரு சூதாட்டக் களம்போல் மாறிவிட்டதாக அவர் சொல்கிறார்.
மற்றொரு தயாரிப்பாளரான தனஞ்செயன் குறைந்த செலவில் உருவாகும் படங்களை இணைய நிறுவனங்கள் வாங்குவதில்லை என்பது உண்மை அல்ல என்கிறார்.
, :
சிவ
கார்த்திகேயன்

