"கர்ணன்' படத்தில் நடித்த பிறகு தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பெண்ணாக நான் மாறிவிட்டேன். இதுதான் சினிமாவின் தாக்கம்," என்று உற்சாகத்துடன் பேசுகிறார் ரஜிஷா.
தற்போது கார்த்தியுடன் 'சர்தார்' படத்தில் நடித்து வருபவர், அடுத்து சூர்யாவின் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
'கர்ணன்' படத்தில் நடித்தபோது இவருக்கு தமிழ் அவ்வளவாக வராதாம். இப்போது தமிழில் சரளமாகப் பேசுகிறார். மொழி தெரிந்து நடித்தால் கதாபாத்திரம் மேலும் வலுவடையும் என்று நம்புகிறாராம்.
"தமிழில் எனது முதல் படமே பெரிதாகப் பேசப்பட்டதில் மகிழ்ச்சி. சொந்த ஊரான கேரளாவில்கூட, நான் அச்சு அசலாக தமிழ்ப் பெண்ணாகவே மாறிவிட்டதாக பாராட்டினர். பலர் ஆச்சரியத்துடன் இந்தப் படம் குறித்தும் எனது கதாபாத்திரம் பற்றியும் விசாரிக்கும்போது பெருமையாக உணர்கிறேன்.
"எல்லாப் புகழும் என்னை அந்தப் படத்தில் நடிக்க வைத்த மாரி செல்வராஜுக்கும் படக்குழுவுக்கும்தான் போய்ச்சேர வேண்டும். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்று சொல்லும் ரஜிஷா இதுவரை நடித்த படங்கள், கதாபாத்திரங்கள் எல்லாமே வெற்றி பெற்றுள்ளன.
'அனுராகக்கரிக்கின் வெல்லம்', 'ஃபைனல்ஸ்', 'லவ்', 'ஜூண்' என வரிசையாக எப்படி வெற்றிப் படங்களைத் தர முடிந்தது? என்று கேட்டால், கதாபாத்திரங்களின் தன்மையை வைத்தே வாய்ப்புகளை ஏற்பதாகச் சொல்கிறார்.
"நல்ல கதைகளுடன் பலரும் என்னைச் சந்திப்பது எனது அதிர்ஷ்டம். கதை கேட்கும்போதே மனதில் ஒரு பொறி தோன்றும். பிடித்திருந்தால் உடனே சம்மதம் தெரிவித்து விடுவேன்.
"கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில்தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிப்பதில்லை. ஏற்கெனவே நான் நடித்த படங்கள், கதாபாத்திரங்களின் சாயலுடன் வருபவர்களைத் தவிர்த்து விடுகிறேன். இவ்வாறு செயல்படுவதுதான் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களாக அமைவதற்குக் காரணம் என நினைக்கிறேன்," என்று சொல்லும் ரஜிஷா, ஒவ்வொரு படத்திலும் மிகுந்த ஈடுபாட்டுடன் நடிப்பதாகக் கூறுகிறார்.
படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் தம்மை வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் பார்க்கவேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்று சொல்பவர், வித்தியாசமான கதாபாத்திரங்கள்தான் தமது வெற்றிக்குக் காரணம் என்கிறார்.
"அதிர்ஷ்டவசமாக அமையும் கதாபாத்திரங்களை நான் வீணடிப்பதில்லை. அவற்றை மெருகேற்றுவதற்காக தீவிர பயிற்சி மேற்கொள்வேன். ஒரு படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் பிறகு அந்தப் படைப்பில் அனைத்து வகையிலும் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இதேபோன்று நினைக்கும் சிலருடன் கூட்டணி அமைவதும் எனக்கு வசதியாக உள்ளது," என்று சொல்லும் ரஜிஷா, அடுத்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.
அறிமுக இயக்குநர் சரத் என்பவர் இயக்கும் படத்தில் நாயகன் ரவி தேஜாவுக்கு ஜோடியாக இவரை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
"மலையாளத்தில் இதுவரை நான் கிராமிய கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. முதன்முறையாக 'கர்ணன்' படத்துக்காக கிராமத்துப் பெண்ணுக்குரிய ஒப்பனையைப் போட்டுக் கொண்டபோது வித்தியாசமாக உணர்ந்தேன்.
"ஆனால், படப்பிடிப்புக்கு முன்பே இந்த ஒப்பனையுடன் அந்தக் கிராமத்தில் சுற்றித் திரிந்து பலருடன் பேசிப் பழகியபோது அந்த கிராமம் மீது எனக்கும் தனிப் பாசம் வந்துவிட்டது. எல்லோருடனும் சேர்ந்து ஒரே இடத்தில் தங்கி இருந்தது அந்தக் கிராமத்திலேயே பல காலம் வாழ்ந்த உணர்வைத் தந்தது.
"இதற்கு முன்பு விளையாட்டுத் துறை சம்பந்தப்பட்ட இரண்டு படங்களில் நடித்துள்ளேன். இரண்டும் வெற்றிப் படங்களாக அமைந்தன. தமிழிலும் அதேபோன்ற வாய்ப்புகள் அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன்.
"என்னைப் பொறுத்தவரை நல்ல நடிகை என்று நம்பி என்னை ஒப்பந்தம் செய்பவர்களுக்கு என்னால் எந்த வகையிலும் சங்கடமோ நஷ்டமோ ஏற்பட்டு விடக்கூடாது. 'கர்ணன்' என்ற ஒற்றைப்படம் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் என்னை அறிமுகப்படுத்தி இருப்பதுதான் அண்மைக் காலத்தில் என் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வு," என்று நெகிழ்கிறார் ரஜிஷா.
ரஜிஷா விஜயன்
, :

