'அண்ணாத்த' படம் இந்த ஆண்டுக்குள் வெளியாவது உறுதி என்று தயாரிப்புத் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்தப் படத்தை எப்படியாவது முடித்துக்கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே தனது ஒரே கவலையாக இருந்தது என்றும் எப்படியோ படம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது என்றும் படக்குழுவிடம் கூறினாராம் ரஜினி.
அவரது இந்தக் கவலையும் தொழில் பக்தியும் அனைவரையும் நெகிழ வைத்ததாம்.
'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகும் 'அண்ணாத்த' படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 80 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார் ரஜினி.
2019ஆம் ஆண்டு இறுதியில் 'அண்ணாத்த' முதல்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. அதன்பிறகு கொரோனா தொற்றுப் பரவல், தமிழக அரசியல் கள நிகழ்வுகள் எனப் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றார் ரஜினி. தொடர்ந்து 32 நாள்கள் அங்கேயே தங்கியிருந்து தன்னுடைய பகுதியை முடித்துக் கொடுத்துள்ளார்.
இன்னும் பத்து தினங்களுக்கு படப்பிடிப்பை நடத்தினால் போதுமாம். ஒட்டுமொத்த படமும் முடிவுக்கு வந்துவிடும் என இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது. அதுவும் நயன்தாரா, மீனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளதாம்.
படப்பிடிப்பில் இருந்து விடைபெறும் முன்பு படக்குழுவினர் மத்தியில் மனந்திறந்து பேசியுள்ளார் ரஜினி. அப்போது மேலும் ஒன்றிரண்டு படங்களில் தாம் நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
"ஆனால் என்னுடைய உடல்நிலை அதற்கு ஒத்துழைக்குமா, தொடர்ந்து நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. 'அண்ணாத்த' என் திரைவாழ்வில் முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்று கவலைப்பட்டேன். நல்லவேளையாக படம் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
"எல்லோரும் வீடு திரும்பி பத்திரமாக இருக்கப் பாருங்கள். மீதமுள்ள பணிகளை கொரோனா தொற்றுப் பரவல் தணிந்த பிறகு செய்யலாம். உங்கள் பாதுகாப்பும் குடும்பத்தாரின் பாதுகாப்பும்தான் முக்கியம். பட வெளியீடு தாமதமானது குறித்து இப்போது கவலைப்பட வேண்டியது இல்லை," என்று ரஜினி படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட வசனங்கள் பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் படமாக்கி விட்டாராம் 'சிறுத்தை' சிவா. படப்பிடிப்புக்கு இடையில் படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோப்பு பணிகளையும் ஒரே சமயத்தில் நடத்தி முடித்திருக்கிறார்கள். எனவே, இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியீடு காண தயாராகிவிடும் எனத் தகவல்.