அண்மைக்காலமாக நடிகைகள் பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வீட்டிலேயே தோட்டம் வளர்த்து பசுமை காக்க வேண்டும் என்கிறார் ஆண்ட்ரியா. அண்மைய புயலில் மும்பையில் ஆயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்ததால், மரக்கன்றுகளை நட அறிவுறுத்தி உள்ளார் கங்கனா ரணாவத்.
நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கொரோனா விழிப்புணர்வு காணொளிகளை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா ஊரடங்கின்போது மக்கள் பயனுள்ள வகையில் தங்கள் பொழுதைச் செலவிட வேண்டும் என்கிறார் நடிகை ஆண்ட்ரியா.
நாம் செய்யக்கூடிய விஷயங்கள், நமக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்துக்கும் உதவும் வகையில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
"என் வீட்டு மொட்டை மாடியில் அழகிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளேன். அதில் ஏராளமான செடிகொடிகளை நட்டு தினமும் பராமரித்து வருகிறேன். இவ்வாறு செய்வது பசுமையைக் காக்க உதவும்.
"வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தை அடிக்கடி பார்க்கும்போது மனதில் புத்துணர்ச்சி ஏற்படும். சுத்தமான காற்று, அழகிய சூழ்நிலை, கண்ணைக் கவரும் செடிகொடிகள், பூக்கள் ஆகியவை நம் உடல்நலத்தை நன்றாக வைத்திருக்கவும் உதவும்," என்கிறார் ஆண்ட்ரியா.
இயற்கை மீது தாம் தீராத அன்பு கொண்டிருப்பதாக குறிப்பிடுபவர், மற்றவர்களும் தன்னைப் போன்று சமூக அக்கறையுடன் முடிந்தவரை சேவையாற்ற வேண்டும் என சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே நடிகை கங்கனா ரணாவத் தனது ரசிகர்கள் தங்களால் இயன்றவரை மரக்கன்றுகளை நடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தாம் மரக்கன்று நடும் புகைப்படத்தையும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அண்மையில் வீசிய புயலால் மும்பையில் ஆயிரக்கணக்கான மரங்கள் சரிந்துவிட்டன. குஜராத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டதாகத் தகவல். இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ள கங்கனா ரணாவத், தம்மால் இருபது மரக்கன்றுகளை மட்டுமே தற்போது நடமுடிந்ததாகவும் வாய்ப்புக் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
அழிந்துவிட்ட மரங்களுக்கு மாற்றாக என்னமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்கள் என அதிகாரிகளுக்குக் கேள்வி எழுப்பியுள்ள கங்கனா, ஒவ்வொரு தனி மனிதரும் பசுமையைக் காக்க தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே இளம் நாயகிகள் கீர்த்தி சுரேஷும் ராஷ்மிகா மந்தனாவும் கொரோனா விழிப்புணர்வுக் காணொளிப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா கிருமியை முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவர சிறுசிறு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினாலே போதும் என்று கீர்த்தி தெரிவித்துள்ளார்.
அவசியமான இடங்களில் இரண்டு முகக்கவசங்கள் அணிவது நல்லது என்றும் தாம் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தமது டுவிட்டர் பக்கத்தில் அனைவரும் நேர்மறை சிந்தனைகளை மட்டுமே பரப்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"இப்போது நாம் எதிர்கொண்டுள்ள சிரமங்கள் அனைத்துமே விரைவில் முடிவுக்கு வரும். நோய்த்தொற்று முடிவுக்கு வரும் வரை அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா தொற்று நாம் நினைத்துப் பார்க்க முடியாத வழிகளில் சவால் விடுகிறது. இத்தகைய கடினமான தருணங்களில் நேர்மறையான எண்ணங்களோடு இருப்பதே இப்போரை வெல்வதற்கான வழியில் நம்மை இட்டுச் செல்லும்," என்று கூறியுள்ளார் ராஷ்மிகா.

