திரைப்படங்கள் தொடர்பான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் மனப்போக்கும் மாறியுள்ளதாகச் சொல்கிறார் தமன்னா.
இப்போது திரையுலகுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"சினிமா மீதான ரசிகர்களின் பார்வை இனிமேல் மாறும். இதனால் கலைஞர்களுக்கான நட்சத்திர மதிப்பீடும் மாறத் தொடங்கி இருப்பதாகக் கருதுகிறேன்.
"படத்தின் கதை நன்றாக உள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே இன்றைய ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நடிகருக்குக் கிடைத்த ரசிகர் கூட்டம் இன்றைய தலைமுறை நடிகர்களுக்குக் கிடைப்பது கடினம்.
"நான் குற்றப் பின்னணி கொண்ட திகில் படங்களில் அதிகம் நடித்ததில்லை என்ற மனக்குறை இருந்து வந்தது.
அந்தக் குறையை 'நவம்பர் ஸ்டோரி' இணையத் தொடர் போக்கி உள்ளது. நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகப்பெரும் சவாலாக இருந்தது," என்கிறார் தமன்னா.
இதற்கிடையே நவம்பர் ஸ்டோரி இணையத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளதாம். இதனால் தயாரிப்புத் தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாகத் தகவல்.
அநேகமாக இந்த இணையத் தொடரில் பணியாற்றிய அதே குழு மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒருவேளை தமன்னாவின் கால்ஷீட் கிடைத்தால் அது உடனடியாக சாத்தியமாகலாம்.
"எனக்கும் கூட ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இணையத் தொடரில் நடித்ததன் மூலம் இதையும் தெரிந்து கொண்டேன்.
"நவம்பர் ஸ்டோரி போன்ற சவாலான கதைகள், கதாபாத்திரங்களில் என்னைத் தொடர்ந்து பார்க்க முடியும் என்ற உத்தரவாதத்தை ரசிகர்களுக்கு அளிக்கிறேன்," என்கிறார் தமன்னா.
"தந்தையைக் காப்பாற்ற வேண்டிய இக்கட்டான தருணத்தில் ஒரு மகளாக நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை முக பாவங்களிலேயே வெளிப்படுத்த வேண்டும்.
"அச்சு அசலான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நாயகி எப்படி அனைத்தையும் எதிர்த்துப் போராடுகிறாள் என்பதை இயக்குநர் கச்சிதமாக காட்சிப்படுத்தி உள்ளார் என்பதுதான் சரி. எனது நடிப்பு, உழைப்பு எல்லாம் அதன் பிறகுதான் வரும். இந்தக் கதையில் உள்ள யதார்த்தமான அம்சங்களும் அவற்றை இயக்குநர் காட்சிப்படுத்தியுள்ள விதமும் கவனிக்கத்தக்கவை. வணிக ரீதியிலும் இந்தத் தொடர் வெற்றிபெற வேண்டும் என விரும்புகிறேன்," என்கிறார் தமன்னா.

